தனிமனித இடைவெளியின்றி அதிமுக உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் வாலாஜாபாத் பேருந்து நிலையம் பகுதியில் அதிமுக கட்சியினர் புதிய உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடத்தினர். அக்கூட்டத்திற்கு நூற்றுக்கணக்கானவர்கள் தனிமனித இடைவெளி எதுவும் இல்லாமல் முகக்கவசம் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாமல் ஒரே பகுதியில் ஒன்றுகூடி இருந்தனர்.
ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்து உயிரிழப்பு 200 தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனிமனித இடைவெளி பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் பல்வேறு வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இச்சூழலில் தொடர்ச்சியாக பல்வேறு கட்சியினர், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலை செவி கொடுத்து கேட்காமல் இதே போல் ஒரே இடத்தில் பொதுமக்களை சமூக இடைவெளியை இன்றியும் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமலும் ஒன்றுகூடி நோய் பரவுவதற்கு வழி செய்து வருகிறார்கள் என புகார் எழுந்துள்ளது.