இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசி ஆராச்சியை தமிழகத்தில் நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தமிழக அரசு முதலமைச்சர் தலைமையில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைகளை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. மனித குலத்தை கொரோனா நோய் தொற்று தாக்குதலில் இருந்து பாதுகாக்க தடுப்பூசிகள் மட்டுமே பேருதவியாக இருக்கும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்து. பல்வேறு நாடுகள் தடுப்பூசிகள் கண்டுபிடிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஒரு தடுப்பூசி கண்டுபிடித்து இந்த தடுப்பூசியை ஆரோக்கியமான நபர்களுக்கு செலுத்தி நோய் எதிர்ப்புத் திறன் கண்டறியும் ஆராய்ச்சிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக இந்திய அளவில் தடுப்பூசியை சோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் சென்னையை தேர்வு செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் முதன்மை ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆய்வு 18 வயதிற்கு மேற்பட்ட ஆரோக்கியமான நபர்களிடம் மேற்கொள்ளப்படும். இந்த ஆராய்ச்சியை சென்னை சேத்துப்பட்டில் அமைந்துள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி கழகமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் இணைந்து மேற்கொள்ளும். சென்னையை பொருத்தவரையில் இந்தக் கோவிஷீல்டு தடுப்பூசி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை ஆகிய இரண்டு இடங்களிலும் சுமார் 300 நபர்களிடம் செலுத்தி சோதனை நடத்தப்பட உள்ளது.
இந்த தடுப்பூசி டி செல்கள் என்று அழைக்கப்படும் வெள்ளை அணுக்களை 14 நாட்களில் மனித உடலில் உருவாக்கும். இந்த வெள்ளை அணுக்கள் மனிதர்களின் உடலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட செல்கள் மீது தாக்குதல் தொடுத்து உடனடியாக அதனை அழித்துவிடும். மேலும் 28 நாட்களுக்குள் நோய் எதிர்ப்பு சக்தியையும் உடலில் உருவாக்கி விடும். இரண்டாம் கட்ட ஆராய்ச்சியைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட ஆராய்ச்சி நடத்தப்பட்டு தடுப்புமருந்து பயன்பாட்டிற்கு வெகு விரைவில் கொண்டுவரப்படும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.