சென்னையில் ஈடுபட்ட பயிற்சியில் தோனி அனைத்து திசைகளிலும் சிக்ஸர் அடித்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் சிஇஓ கே.எஸ்.விஸ்வநாதன் தெரிவித்தார்.
ஐபிஎல் தொடருக்கு முதற்கட்ட பயிற்சியை மேற்கொள்ள கடந்த வெள்ளிக்கிழமை தோனி, ரெய்னா உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் சென்னைக்கு வருகை தந்தனர். இதைத்தொடர்ந்து 5 தினங்கள் சென்னை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நாட்களுக்குப் பின்னர் மேற்கொள்ளும் பயிற்சி என்பதால் காயம் ஏற்படாதவாறு கவனமாக பயிற்சி செய்தனர்.
இந்நிலையில் பயிற்சி குறித்து பேசிய சென்னை அணியின் சிஇஓ கே.எஸ்.விஸ்வநாதன், “தோனி பயிற்சியின்போது சிறப்பாக பந்துகளை எதிர்கொண்டார். அத்துடன் அனைத்து திசைகளிலும் சிக்ஸர்களை அடித்தார். எப்போதும்போல அவர் தன்னிச்சையாகவும், நிதானமாகவும், உறுதியுடனும், மகிழ்ச்சியுடனும் இருந்தார். அவரது திடீர் ஓய்வு அறிவிப்பு அணியினருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த 5 நாட்கள் பயிற்சியில் வீரர்கள் அனைவரும் முழு வேகத்துடன் பயிற்சியில் ஈடுபடவில்லை. நீண்ட இடைவெளிக்கு பின்னர் மேற்கொள்ளும் பயிற்சி என்பதால் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அளவான பயிற்சியை வீரர்கள் செய்தனர். இருப்பினும் அவர்களின் இயல்பான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிக்கொண்டு வந்தனர். யுஏஇ சென்றடைந்த பின்னர் மீண்டும் பயிற்சிகள் தொடங்கும். அங்கு 6 நாட்கள் தனிமைப்படுத்தலில் வீரர்கள் இருப்பார்கள்” என்று தெரிவித்துக்கொண்டார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) நடைபெறும் 13வது ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10தேதி முடிவடைகிறது. இதில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் இன்று யுஏஇ புறப்பட்டுச் சென்றனர்.