விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த ராமசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,” வரும் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக இந்த விழா கொண்டாடப்படுவது வழக்கம். தற்போது கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் சிலைகளை நிறுவி வழிபடுவதற்கும், ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பித்தது. தமிழக் ஆரசின் உத்தரவை ரத்து செய்து, சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை கடைபிடிக்கும் வகையில் உரிய வழிகாட்டுதலுடன் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதித்து உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

Vinayagar Chaturthi Festival Consultation meeting ...

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “அழகர் கோவில் சித்திரைத் திருவிழா உள்பட 400 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படும் பல கோவில்களின் பழமையான விழாக்கள் கூட, கொரோனா நோய்த்தொற்று காரணமாக விமரிசையாக கொண்டாட அனுமதிக்கப்படவில்லை. கொரோனா தொற்று பரவி வரும் சூழலில் பொது இடங்களில் சிலைகளை நிறுவ அனுமதிக்க இயலாது. அது போல அனுமதி வழங்கினால், குறைவான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் பாதிப்பிற்கு உள்ளாவர்.

நண்பனை மர்ம உறுப்பில் தாக்கி ...

கொரோனாவிற்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், முகக்கவசமும், கிருமி நாசினியும், நோய் எதிர்ப்பை அதிகரிப்பதுமே தற்போதைய பாதுகாப்பாக கருதப்படும் சூழலில், மக்கள் பெருமளவில் கூடுவது அதிக ஆபத்தை ஏற்படுத்தலாம். மத வழிபாட்டு பழக்கம் மற்றும் உணர்வுகள் தொடர்பான முடிவுகளை தற்போதைய நோய்த்தொற்று சூழலை கருத்தில் கொண்டே எடுக்க வேண்டும். ஆகவே கொரோனா நோய்த்தொற்றுப்பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பான அரசின் உத்தரவில் தலையிட இயலாது. அது சரியான முடிவே” எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.