இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்திருக்கிறார்.
2004 -ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமான தோனி, பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி காட்டியவர். 2007 ம் ஆண்டு துவங்கி 2016 வரை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டார். கேப்டனாக தோனி தலைமையில் இந்தியா அணி, ஐ.சி.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று விதமான தொடர்களையும் (50 ஓவர்,டி20, சாம்பியன்ஸ் டிராபி) வென்றது குறிப்பிடத்தக்கது. கேப்டன் தோனி தலைமையில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளிலும் முதலிடத்தை பிடித்ததும் குறிப்பிடதக்கது.
டெஸ்ட் போட்டிகளில் இருந்து முன்னதாகவே ஓய்வை அறிவித்து விடாலும் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 ஆட்டங்களில் விளையாடி வந்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் முடிந்த ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய தோனி, அதன் பின்னர் சர்வதேச ஆட்டங்களில் விளையாட வில்லை. டி20 உலகக் கோப்பை தொடரில் மீண்டும் இந்திய அணிக்காக களம் காணுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக அந்த தொடர் ரத்து செய்யப்பட்டது.
தற்போது ஐபிஎல் போட்டிகளுக்காக தயார் ஆகி வரும் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் தனக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி எனவும் அவர் தெரிவித்துள்ளார். தோனி இனி இந்திய அணிக்காக விளையாடுவதை பார்க்க முடியாது என ரசிகர்கள் வேதனைகளை பகிர்ந்து வருகின்றனர்.
Also Read: `4 ஆண்டுகள் ஐபிஎல்; 2023 உலகக் கோப்பை ரோடு மேப்!’- தோனி குறித்து இங்கிலாந்து ஸ்பின்னரின் லாஜிக்
ரசிகர்களால் செல்லமாக `தல’ என்று அழைக்கப்படும் தோனியை தொடர்ந்து `சின்ன தல’ என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தோனியின் வழியை பின்பற்ற விரும்புவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.