நாட்டின் 74 வது சுதந்திர தினம் இந்தியா முழுக்க கொண்டாடப்பட்டு வந்தாலும், இந்திய வரலாற்றில் கொரோனாவால் ஊரடங்கில் அடைப்பட்டுக்கொண்ருப்பது இதுதான் முதல்முறை. அதனால், இந்த சுதந்திர தினத்தை எப்படி பார்க்கிறார்கள் என்று சில பிரபலங்களிடம் கேட்டோம், சமூக செயற்பட்டாளர் டிராஃபிக் ராமசாமி சுதந்திரத்திற்கு முன்பிருந்த இந்தியாவையும், அதற்கு பிறகான இந்தியாவையும் கண்ணால் கண்டவர். அவரிடம் பேசினோம்,
“கொரோனா என்பது ஒரு வியாதியே அல்ல. மத்திய மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட ஒரு தொற்று வியாதி. அந்தக் காலத்தில் தட்டமை எல்லாம் வந்தது. ஆனால், இந்தளவுக்கு கொள்ளை நடக்கவில்லை. இந்திய பொருளாதாரத்தைச் சீரழிக்கவே இப்படி உருவாக்கியுள்ளார்கள். அதனால்தான், பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியாருக்கு தாரை வார்த்துவிட்டார்கள். உண்மை சுதந்திரத்தை விட்டுவிடுங்கள். மோசமான சுதந்திரம்கூட மக்களுக்கு கிடைக்கவில்லை. கடைசியாக ராஜாஜியிடம்தான் இந்திய சுதந்திரத்தை ஆங்கிலேயர்கள் ஒப்படைத்தார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் இந்திய சுதந்திரத்தை படுகுழியில் தள்ளிவிட்டார்கள்.
நேரு காலத்தில் நாடு கொஞ்சம் நலமாக இருந்தது. இந்திரா காந்தி காலம்கூட ஓரளவிற்கு பரவாயில்லை. அதன்பிறகு, இருந்த காங்கிரஸ், பா.ஜ.க தலைவர்கள் நாட்டின் நிலமையை மோசமாகிவிட்டார்கள். இப்போது மனித உரிமையையே அடியோடு பறித்துவிட்டார்கள். இவர்களுக்கு தக்க தண்டனையை அவர்களின் ராமரே, ஸ்ரீரங்கநாதரே வழங்குவார். மத்தியில்தான் மோசமான ஆட்சி என்றால் மாநிலத்தில் அதைவிட மோசமாக இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமிக்கு பதவி சசிகலா கருணையால் கிடைத்தது. அவர், இதனை அம்மா ஆட்சி என்கிறார். அம்மாவே ஒரு குற்றவாளி. அப்போ, குற்றவாளி ஆட்சிதான் நடத்துகிறார்கள். தேசத்துரோகிகள் இவர்கள்தான். இது சுதந்திர தினம் அல்ல; கருப்பு தினம். நாம் தேசியக் கொடிக்கு மரியாதை கொடுக்கவேண்டும். அரசுக்கு கொடுக்கக்கூடாது.
1967 க்குமுன்பு சொத்தை விற்று எம்.எல்.ஏ ஆனார்கள். இப்போது மக்கள் வரிப்பணத்தை வைத்து கொள்ளை அடிக்கிறார்கள். டெல்லி செங்கோட்டையில் எதற்கு 500 பேரை அழைத்து கொடி ஏற்றுகிறார்கள்? இந்த கோரோனாவில் மக்களை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு இவர்களுக்கு, எதற்கு இராணுவப்படை மரியாதையெல்லாம்? யாரை ஏமாற்றும் வேலை இது? மக்கள் பார்க்கமுடியாத சுதந்திர தினம் எதற்கு? நம்மை அடக்குமுறையில் வைத்திருக்கும் தேசத்துரோகிகள் இவர்கள்தான். நான் இவர்களின் அணுகுமுறை குறித்து வழக்கு தொடரவிருக்கிறேன். நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை உண்டு” என்கிறார், விரக்தியுடன்