தலைக்காவேரி நிலச்சரிவில் காணாமல்போன புரோகிதரை தேடி வந்த அவரது மகள்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
கர்நாடகா மாநிலத்தில் தொடர்ந்து பெய்துவரும் தென்மேற்கு பருவமழையால் தலைக்காவேரி பகுதியில் பல இடங்களில் சிறிய நிலச்சரிவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் நிலச்சரிவில் தலைக்காவேரி கோவிலின் தலைமை புரோகிதர் நாராயன ஆச்சாரி காணாமல் போனார். அவரது மனைவி , சகோதரர் மேலும் இருவர் என மொத்தம் 5 பேர் காணாமல் போனார்கள்.
இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நாட்டில் வசிக்கும் அவரது இரண்டு மகள்களும் இந்தியா திரும்பினர். விமான நிலையத்திலிருந்து ஒரு டாக்ஸியில் குடகுவை அடைந்தனர். அவர்கள் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தைப் பார்வையிட்டபிறகு மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் வி.சோமண்ணாவை சந்தித்து, காணாமல்போனவர்களை தேடும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு மாவட்ட நிர்வாகத்துக்கும் அமைச்சருக்கும் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில் விமான நிலையத்தில் இருந்து இவர்களை அழைத்து வந்த டாக்ஸி டிரைவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து இரு பெண்களையும் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டதால் இருவரும் இப்போது பாகமண்டலாவில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர்.
மக்கள் வசிக்காத மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் சிறு சிறு நிலச்சரிவுகள் ஏற்பட்டிருந்தாலும். தலைக்காவேரியில் ஏற்பட்ட ஒரு பெரிய நிலச்சரிவில் ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர். தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்ததால் மோசமான வானிலை காரணமாக காணாமல் போனவர்களை தேடும் பணியில் தடங்கல் ஏற்பட்டது. திங்களன்று குடகுவில் மழை குறைந்துபோதிலும், தலைக்காவேரியில் காணாமல் போனவர்களைத் தேடும்பணியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை. இதில் தலைக்காவேரி கோயிலின் நிர்வாகியும், நாராயணனின் சகோதரருமான ஆனந்ததீர்த்த சுவாமியின் சடலம் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.