மேற்கு டெல்லியில் செவ்வாய்க்கிழமை அன்று வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, குற்றவாளிகளால் மிகவும் தாக்கப்பட்டுள்ளார். அந்த சம்பவத்திற்கு பிறகு குற்றவாளிகள் அங்கிருந்து தப்பிய சூழலில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த சிறுமியை அக்கம்பக்கத்தினர் அடையாளம் கண்டு பெற்றோருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
போலீசார் அந்த சிறுமியை மீட்டபோது சுய நினைவின்றி இருந்துள்ளார். அவரை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் அனுமதித்துள்ளனர். அதோடு குற்றவாளிகளை விரைந்து பிடிப்பதற்காக போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
“பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்ட போது அவர் மயக்க நிலையில் சுய நினைவின்றி இருந்துள்ளார். அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அடுத்த 24 முதல் 48 மணி நேரம் வரை அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார்.
இது ஒரு காட்டுமிராண்டித்தனமான குற்றம். இந்த குற்றத்தை செய்தவரை விரைந்து பிடிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த வழக்கில் அரசு தலைசிறந்த வழக்கறிஞரை நியமிக்க உள்ளோம். அதன் மூலம் குற்றம் செய்தவருக்கு மிகக் கடுமையான தண்டனை பெற்று கொடுக்க முயற்சிப்போம்” என தெரிவித்துள்ளார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்.
‘அந்த சிறுமி வீட்டில் இருந்தபோது உடல் முழுவதும் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு, வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகளை பிடிக்க அந்த சிறுமியின் வீட்டுக்கு பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவை ஆராய்ந்து வருகிறோம். குற்றம் செய்தவர் மீது போக்சோ சட்டம் பாய்வது மட்டுமின்றி இந்த வழக்கு கொலை வழக்காகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி தாக்கப்பட்டபோது அவரது பெற்றோர்கள் பணியில் இருந்துள்ளனர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது’ என்று மூத்த போலீஸ் அதிகாரி கோன் தெரிவித்துள்ளார்.