புகாட்டியின் செண்டோடிசி என்ற ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றை முன்பதிவு செய்துள்ளார் ரொனால்டோ
உலகின் முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 2009-ஆம் ஆண்டு முதல் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் கிளப்புக்காக விளையாடி அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். பின் மாட்ரிட் அணியிலிருந்து விலகி, இத்தாலியின் பிரபல கிளப்பான ஜூவாண்டஸ் அணியில் இணைந்தார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு உலக அளவில் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. கால்பந்து என்பதையும் தாண்டு ஃபிட்னெஸ், கார் உள்ளிவற்றில் ரொனால்டோவுக்கு ஆர்வம் அதிகம். தன் வீட்டில் ஆடம்பர கார்களை வாங்கி நிறுத்தி வைப்பது அவருக்கு பிடித்தமான ஒன்று. இந்நிலையில் சமீபத்தில் அவருடைய யுவெண்டஸ் அணி 36வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அந்த வெற்றியை கொண்டாடும் விதமாக புகாட்டியின் செண்டோடிசி என்ற ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றை முன்பதிவு செய்துள்ளார் ரொனால்டோ. இந்த காரின் மதிப்பு ரூ.75 கோடி ஆகும்.
உலக அளவில் இந்த கார்கள் இதுவரை 10 மட்டுமே தயார் செய்யப்பட்டுள்ளன.1600 குதிரைத்திறன், 380 கிமீ வேகம், 2.4 விநாடிகளில் 60கிமீ வேகத்தை எட்டும் திறன் என அதிவேகத்திற்கு ஏற்ற இந்த கார் 2021ம் ஆண்டு ரொனால்டோவிற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் பிரியரான ரொனால்டோ வீட்டில் ஏற்கெனவே லம்போர்கினி, புகாட்டி வகை கார்கள், ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட உலகில் டாப் பிராண்ட் கார்கள் நின்றுகொண்டிருகின்றன. அந்த வரிசையில் செண்டோடிசினியும் இடம் பெறவுள்ளது. இதுவரை ரொனால்டோவிடம் உள்ள கார்களின் மதிப்பு மட்டுமே மொத்தமாக ரூ.264 கோடி ஆகும்.