தமிழகத்தில் துப்பாக்கிக் கலாச்சாரம் பரவுவது நல்லது அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உரிமம் இல்லாமல் துப்பாக்கி பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்ற வகையில் தொடரப்பட்டிருந்த வழக்கில் இன்று கருத்து தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர், தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் மெல்ல மெல்ல பரவி வருகிறது என்றனர். அத்துடன் இது தமிழகத்திற்கும், நாட்டுக்கும் நல்லதல்ல என்று குறிப்பிட்டனர்.
துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் இதுவரை சட்ட விரோதமாக ஆயுதங்கள் விற்றதாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்று கேள்வி எழுப்பினர். அத்துடன் தமிழகத்தில் உரிமம் பெறப்பட்டு எத்தனை பேருக்கு துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன எனவும், உரிமம் இல்லாமல் துப்பாக்கியை பயன்படுத்தியதாக எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கேட்டனர்.
இதுமட்டுமின்றி உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி பயன்படுத்தி கொள்ளையடித்ததாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன ? வட மாநிலங்களில் இருந்து உரிமம் இல்லாத துப்பாக்கிகள் எளிதாக கிடைக்கிறதா ? வெளிநாடுகளில் இருந்தும் ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுகிறதா ? ரவுடி கும்பல் துப்பாக்கிகள் பெற்று கொலை, கொள்ளை, நில அபகரிப்பு குற்றத்தில் ஈடுபடுகின்றனரா ? நக்ஸல்கள், சமூக விரோதிகளும், ஆயுதங்களை வைத்து சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துகின்றனரா ? என சரமாரியாக கேள்விகளை முன்வைத்தனர். இதுதொடர்பாக தமிழக காவல்துறை பதிலளிக்கமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.