ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜியோவில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் மட்டும் சுமார் ஒரு கோடி பயனர்கள் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளது அந்நிறுவனம்.
ஒவ்வொரு காலாண்டின் முடிவிற்கு பிறகு தங்களது வியாபார தரவு தொடர்பான விவரங்களை ஜியோ நிறுவனம் பொது வெளியில் அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் அண்மையில் கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதம் வரையிலான காலாண்டு வியாபார விவரங்களை அறிவித்துள்ளது ஜியோ.
மொத்தமாக 183 சதவீத வளர்ச்சியை இந்த மூன்று மாதங்களில் ஜியோ பெற்றுள்ளது. சுமார் 2,520 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளதாகவும் ஜியோ தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் இருந்தபோதிலும் சமீபத்தில் கிடைத்த பல முதலீடுகள் மூலமாக இந்த வளர்ச்சியை அடைந்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளது.
கூகிள், பேஸ்புக், குவால்காம், இன்டெல், சில்வர் லேக், விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ், ஜெனரல் அட்லாண்டிக் மாதிரியான நிறுவனங்கள் சுமார் 1,56,056 கோடி ரூபாயை ஜியோவில் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் அதன் நிறுவனர் முகேஷ் அம்பானி.
ஜியோ நிறுவனம் வரும் 2021 முதல் 5ஜி சேவையை ஆரம்பிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார் முகேஷ் அம்பானி.