தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முதல் லேசானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. நேற்றிலிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களிலும் கொட்டித்தீர்த்த மழையால் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
தற்போது கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. கோட்டூர்புரம், அடையாறு, பெசன்ட் நகர், கே,கே,நகர், வேளச்சேரி, நன்மங்கலம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. போரூர், வளரசரவாக்கம், ராமாபுரம் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
திருச்சி மாவட்டம் லால்குடி, சமயபுரம், மண்ணச்சநல்லூர் சுற்று வட்டார பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான வரம்பியம், கச்சனம், ஆலத்தம்பாடி, வேளூர், பல்லங்கோவில், கட்டிமேடு, ஆதிரெங்கம் விட்டுகட்டி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. திருத்துறைப்பூண்டி- 7 செ. மீ மழையும், திருவாரூர் – 5 செ.மீ மழையும், முத்துப்பேட்டை -3.5 செ.மீ மழையும், நன்னிலம் – 3 செ. மீ மழையும் பதிவானது.
நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மற்றும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நாகை, நாகூர், வேளாங்கண்ணி, வேட்டைக்காரனிருப்பு, விழுந்தமாவடி, திருக்குவளை, கீழ்வேளூர், கீழையூர், திருமருகள், மீனம்ம நல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மற்றும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் கோதையார், பேச்சிப்பாறை, கடையால், குலசேகரம், குழித்துறை, மார்த்தாண்டம், களியக்காவிளை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் கன மழை பெய்து வருகிறது.