கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வரவே துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய சூழல் போலீசாருக்கு ஏற்பட்டதாக வட்டாட்சியர் சம்ர்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கே. புதுப்பட்டி அருகே போசம்பட்டி கிராமத்தில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே மோதல் நடந்தது. இந்த மோதலில் போலீசார் வானத்தை நோக்கிச் சுட்டனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பொதுமக்கள் மற்றும் போலீசாரிடம் உரிய விளக்கங்களை கேட்டு அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கடந்த 21 ஆம் தேதி உத்தரவிட்டு இருந்தார்.
ஆட்சியரின் உத்தரவின் படி வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி பொது மக்களிடமும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட போலீசாரிடமும் விளக்கம் பெற்று அதன் அறிக்கையை இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் சமர்ப்பித்தார்.அந்த அறிக்கையில் இருதரப்பினரும் எல்லை மீறி சென்றதாலும், போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாலும், கலவரத்தை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.