ஒவ்வொரு நாளும் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வைரஸ் தொற்றின் வேகத்தை குறைக்க மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், அரசாங்க அதிகாரிகள் என பலரும் போராடிக் கொண்டிருக்கின்றனர். கொரோனா தடுப்பு மருந்தை கொண்டு வர அடுத்த ஆண்டு வரை காலம் எடுக்கக்கூடும் என உலக பொது சுகாதார மையமும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மத்திய பிரதேச சட்டசபையின் இடைக்கால சபாநாயகரும், பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகருமான ராமேஸ்வர் ஷர்மா ‘பகவான் ராமருக்கு அயோத்தியில் கோயில் கட்டினால் தான் இந்தியாவில் கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர முடியும்’ என சொல்லியுள்ளார்.
“மனித குலத்தின் நலனுக்காக பழங்காலத்தில் அரக்கர்களை கொல்வதற்காக அவதரித்தவர் பகவான் ராமர். அவருக்கு அயோத்தியில் கோயில் கட்ட அஸ்திவாரம் போட்டாலே கொரோனா என்ற அரக்கனின் பிடியிலிருந்து நம்மை காத்திடுவார்” என தெரிவித்துள்ளார் அவர்.
‘பிரதமர் நரேந்திர மோடி வரும் ஆகஸ்ட் ஐந்தில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவார்’ என ஸ்ரீ ராம ஜன்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளியோடு இந்த பணிகள் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.