ரஜினியின் இ-பாஸ் விவகாரம் குறித்த கேள்விக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் பதில் அளித்துள்ளார்.
சென்னை வியாசர்பாடி பகுதியில் தெரு நாடகம் வாயிலாக கொரோனா தொற்று பரவலை விளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் கூறியதாவது “ களப்பணிகளால் எந்த அளவிற்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதற்கு வட சென்னை பகுதி உதாரணம். இராயபுரம், தண்டையார்பேட்டை மண்டலங்களில் தொற்றுகள் குறைந்துவிட்டது. தொடர்ந்து 3-4 மாத காலத்திற்கு இதே களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ரஜினி இ-பாஸ் வாங்கினாரா என்பது குறித்து ஆய்வு செய்ய சொல்லி உள்ளோம். ஒன்றரை லட்சம் இ-பாஸ்களை ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. ரஜினி அவர் பெயரிலோ அல்லது அவரது ஓட்டுநர் பெயரிலோ இ-பாஸ் வாங்கி இருக்கலாம். நிலவரம் என்ன? என்பதை ஆய்வு செய்து விரைவில் கூறப்படும். பாஸ் எடுக்காமல் பயணம் செய்திருந்தால் காவல்துறையினர் அவர்கள் மீது நடவடிக்கைகளை எடுப்பார்கள். மாதவரம் பழச்சந்தையில் மொத்த விலை வியாபாரம் மட்டுமே செய்ய வேண்டும்”என்று அவர் தெரிவித்தார்.