கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப்பெறுவது குறித்து முறைப்படி அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன் என்று தோனியின் எதிர்காலம் குறித்து இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவுடன் “கிரிக்பஸ்” இணையதளத்துக்காக உரையாடிய குமார் சங்கக்காரா, தோனியின் ஓய்வு அறிவிப்பு குறித்த கேள்விக்கு “ஓய்வு குறித்து முடிவெடுப்பது வீரருக்கு வீரர் மாறுபடும். சில நேரங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதோ அல்லது செய்திக் குறிப்பு வெளியிடுவதோ தேவையில்லை என சிலர் நினைக்கலாம். சிலர் ஓய்வு எடுப்பது குறித்து முடிவெடுத்துவிட்டால் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் அவர்களே விலகிக்கொள்வார்கள். அது குறித்த விவாதங்களை மக்களிடமே விட்டுவிடுவார்கள்” என்றார்.
மேலும் தொடர்ந்த சங்கக்காரா “தான் இப்போது என்ன செய்துக் கொண்டு இருக்கிறோம் என்பதையும் என்ன செய்ய வேண்டும் என்பதை மக்களே விவாதிக்க வேண்டும் என்று தோனி நினைக்கிறார். அவருக்கு எது சிறந்தது என தெரியும். அவரை அணியில் சேர்த்துக்கொள்ளலமா வேண்டாமா என்ற முடிவை தேர்வாளர்களிடமே விட்டுவிட்டார். பிசிசிஐ வழிமுறைகளை பெரிதும் மதிக்கிறார் அதன்படியே செயல்படுவார். அவரின் முடிவை எடுப்பதற்கு இன்னும் யோசிக்கிறார், ஆனால் முடிவு தன்னையும், கிரிக்கெட்டும், குடும்பமும் பாதிக்காத வகையில் எடுப்பார்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் “இந்தியாவுக்காக தேர்வாகவில்லை என்றால் தோனி பெரிதாக கவலைப்படமாட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடுவதில் மகிழ்ச்சியாக இருப்பார். ஆனால் என்றாவது ஒருநாள் தோனி பயிற்சிக்காக சென்னை வரவில்லை என்றால், அப்போது நாம் தெரிந்துக்கொள்ளலாம் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெற முடிவெடுத்துவிட்டார் என்று” என்கிறார் சங்கக்காரா.