தன்னுடைய 1000 சிசி சூப்பர் பைக்கில் 300 கி.மீ வேகத்தில் பறந்த சாஃப்ட்வேர் இளைஞர், அந்த பைக் ரைடிங்கை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வைரலாக்கினார். இதனால் பெங்களூரு காவல்துறை இவரது பைக்கை பறிமுதல் செய்துள்ளது.
சாகசத்துக்காக இந்த ரைடிங்கை செய்துள்ளார் 29 வயதான மென்பொருள் பொறியாளர் முனியப்பா. இவர் அந்த வீடியோவில் முதலில் தனது ஊதா நிற பைக்கினை காட்டுகிறார். பிறகு தனது பைக் ரைடை மடிவாலாவிலிருந்து தொடங்கி 13 கிமீ பயணம் செய்துள்ளார். இவர் தன்னுடைய ஹெல்மெட்டில் பொருத்தியிருந்த கேமராவின் மூலமாகவே இந்த காட்சியை பதிவுசெய்துள்ளார். 90 கி.மீ வேகத்தில் பயணத்தை தொடங்கும் இவர், படிப்படியாக தனது வேகத்தை அதிகரிக்கிறார். அப்போது சாலைகளில் சென்ற பேருந்துகள், கார்கள், வாகனங்கள் அனைத்திற்கு இடையிலும் ஜிக்ஜாக்காக நுழைந்து ஓட்டி செல்கிறார். தொடர்ந்து 140 கி.மீ , 200 கி.மீ என்று வேகத்தை அதிகரித்த முனியப்பா இறுதியாக 299 கி.மீ வேகத்தை தொடும் காட்சியை பதிவு செய்துள்ளார்.
பைக் ரைடோடு நிறுத்தாமல் அவர் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமிலும் பதிவு செய்தார், அங்குதான் வந்தது வினை. இந்த வீடியோவை பார்த்த சைபர் கிரைம் போலீசார் முனியப்பா பற்றிய தகவல்களை சேகரித்து பைக்கை பறிமுதல் செய்து வழக்கு பதிந்துள்ளனர் பெங்களூரு இணை ஆணையர் சந்தீப் பட்டீல் “ 300 கி.மீ வேகத்தில் பைக்கில் செல்வது அவரின் உயிருக்கும் அடுத்தவர்களின் உயிருக்கும் ஆபத்தானது. பொதுமுடக்கம் காரணமாக பெங்களூரின் சாலைகள் வெறிச்சொடி கிடந்ததால் இவரால் இவ்வளவு வேகமாக செல்லமுடிந்திருக்கிறது. மத்திய குற்றப்பிரிவு இவரது பைக்கை பறிமுதல் செய்து, மேல் நடவடிக்கைக்காக போக்குவரத்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளது” என்றார்.