மதுரையில் மாற்றுத்திறனாளி ஒருவர், கொரோனாக் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரிய முகக் கவசத்தை தயார் செய்து கவனம் ஈர்த்துள்ளார்.
சென்னையைத் தொடர்ந்து மதுரையில் கொரோனாத் தொற்றானது வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் தடுப்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வரும் இந்தச் சூழ்நிலையில், மதுரையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான மணிகண்டன் என்பவர் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு பெரிய முகக் கவசம் ஒன்றை தயார் செய்துள்ளார். அதனை வாகனத்தில் ஏந்தியபடி, மதுரையைச் சுற்றியுள்ள பொது இடங்களில் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். இந்த வித்தியாசமான விழிப்புணர்வு மதுரை மக்களிடம் கவனம் ஈர்த்துள்ளது.