அசாமில் கடந்த ஒரு வார காலமாக கோரதாண்டவம் ஆடும் வெள்ள பாதிப்புகளால் இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளனர்
அசாம் மாநிலத்தில் கடந்த வாரத்திற்கும் மேலாக பெய்துவரும் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா உள்ளிட்ட 13 ஆறுகள் மற்றும் அதன் துணை ஆறுகளில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் காரணமாக தற்போது 24 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களிலுள்ள சுமார் 3 ஆயிரம் கிராமங்கள் பெரும் பாதிப்பில் சிக்கியுள்ளன.
வெள்ளத்தால் வீடுகள், சாலைகள், விளைநிலங்கள் மோசமாக சிதைந்துள்ளதுடன் சுமார் 47 ஆயிரம் பேர் வீடிழந்து தவிக்கின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் 649 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 110 பேர் வெள்ளத்தாலும், நிலச்சரிவில் சிக்கியும் உயிரிழந்துள்ளனர்.
25 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் மக்கள் மட்டுமின்றி விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 9 காண்டாமிருகம் உட்பட 108 விலங்குகள் கசிரங்கா பூங்காவில் உயிரிழந்துள்ளன. அந்த பூங்காவில் 85% நிலப்பரப்பு தண்ணீரில் மூழ்கியுள்ளது. 1.16 இலட்சம் ஏக்கர் விவசாய பயிர்கள் அழிந்துபோயுள்ளதாகவும், மொத்தம் 27 லட்சம் விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது