சீனாவில் கொரோனா பரவ ஆரம்பித்ததிலிருந்தே தொழிற்சாலைகள் மூடப்பட்டு இறக்குமதி முற்றிலும் சரிந்து போனதால், உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். அதில், அதிக நிறுவனங்கள் ஜப்பானை சேர்ந்தவைதான். அதனால், தங்கள் நாட்டின் நிறுவனங்கள் முடங்கிப்போயுள்ளதை மீட்டெடுக்கும் முயற்சியாக தனி மெகா பட்ஜெட்டை ஒதுக்கி தங்கள் நாட்டிற்கே வந்து உற்பத்தி செய்ய ஜப்பான் அரசு ஆன்லைனில் புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளது.
சீனாவுக்கு அதிகமாக ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் வர்த்தக நாடு என்றால், அது ஜப்பான்தான். இரண்டும் நட்புறவு நாடுகள். அடிக்கடி சீன பிரதமர் ஜி ஜின்பிங் ஜப்பானுக்கு விசிட் அடிப்பவர். ஆனால், கொரோனாவால் சீனாவிலிருந்து இறக்குமதி பொருட்கள் தடைப்பட்டுப் போனதால் ஜப்பான் பெரிதும் பாதிப்படைந்துவிட்டது. நிலைமையை சரிசெய்யாவிட்டால் மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை உணர்ந்து, கடந்தமாதம் ஒரு சிறப்புக் குழுவை அமைத்தது. அந்தக்குழு எதிர்கால முதலீடு குறித்தும் சீனாவிலுள்ள ஜப்பான் நிறுவனங்கள் மீண்டும் ஜப்பானுக்கே மாற்றி உற்பத்தியை துவங்க வேண்டிய அவசியத்தையும், தென்கிழக்கு ஆசியாவின் உற்பத்தியை மேம்படுத்தவும் பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரைகளின் படிதான் ஜப்பான் இம்முடிவை எடுத்துள்ளது.
ஆனால், ஜப்பானுக்கும் சீனாவுக்குமான வர்த்தக உறவு முறிந்துபோய்விடும் என்று எச்சரிக்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். ‘சீனாவில் நிறுவனங்களின் வளர்ச்சியை மீண்டும் தொடங்க எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்கிறோம்’ என்றிருக்கிறார், சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாகோ லிஜியன்.
கொரோனா பேரிடரால் சீனாவிலிருந்து தங்கள் நிறுவனங்களை வெளியேற்ற 536 மில்லியன் டாலர் மானியமாக வழங்கவிருக்கிறது ஜப்பான். தற்போது, 57 ஜப்பான் நிறுவனங்கள் சீனாவில் இயங்கிவருகின்றன. கூடுதலாக 30 நிறுவனங்கள் சீனாவிலிருந்து தென்கிழக்கு ஆசியநாடுகளான வியட்னாம், மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு மாற்றுவதற்காகவும் ஜப்பான் அரசு மானியம் வழங்கவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறது. இதற்காக, மொத்தமாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ தலைமையிலான அரசு 243.5 பில்லியன் தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது.