கொரோனா விதிமுறைகளை மீறியதற்காக இங்கிலாந்து அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு எச்சரிக்கையும் அபராதத்தையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விடுத்துள்ளது.
இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே உயிர் பாதுகாப்பு சூழலுக்கு (Biosecurity bubble) நடுவே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணி வீரர்களும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாத வகையில் கடும் கட்டுப்பாடுகளுடன் விதிகளை பின்பற்றி ஆடி வருகின்றனர். முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த சில நாள்களுக்கு முன்பு மான்சஸ்டரில் தொடங்கியது. அதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக இங்கிலாந்து அணியிலிருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விதிகளை மீறியதற்காக நீக்கப்பட்டார். இதனையடுத்து ஜோப்ரா ஆர்ச்சர் 5 நாள்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு முறை கொரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இவரது தனிமை காலத்துக்குள் 2 பரிசோதனைகளிலும் நெகெட்டிவ் என்று வந்தால்தான் ஜோப்ரா ஆர்ச்சர் இந்தத் தொடரில் நீடிக்க முடியும். இந்நிலையில் விதிகளை மீறியதற்காக ஜோப்ரா ஆர்ச்சருக்கு எச்சரிக்கை விடுத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவருக்கு அபராதமும் விதித்துள்ளது. மேலும் கொரோனா சோதனை செய்தப் பின்பு நெகட்டிவ் வந்தவுடன் ஜூலை 21 ஆம் தேதி முதல் இங்கிலாந்து அணியுடன் இணையலாம் என தெரிவித்திருக்கிறது.