கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உயிர் காக்கக் கூடிய மருந்துகளின் தட்டுப்பாடு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. இதை சாதகமாக்கி தரகர்கள் கள்ளச்சந்தையில் இரண்டு மடங்கு அதிக விலையில் மருந்துகளை விற்பனை செய்கிறார்கள் என புதிய தலைமுறை கள ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உயிர் காக்கக் கூடிய ஊசி மருந்துகளில் ஒன்றாக கருதப்படும் Tocilizumab (400 mg) குப்பி மருத்துவமனைகளில் தற்போது பெரும்பாலும் எங்கும் கிடைப்பதில்லை. சிகிச்சைக்கு உயர்ந்த விலை கொண்ட மருந்துகளையும் ஊசிகளையும் கொள்முதல் செய்வதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என கூறப்பட்ட நிலையில் தற்போதைய சூழலில் டெசில்ஜுமாப் மருந்தின் தட்டுப்பாடு அதிக அளவில் உள்ளது.
குறிப்பாக நோய் தொற்று அதிகம் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் இத்தகைய மருந்து இருப்பு இல்லை என்பது வேதனையாக உள்ளது. நோய்த்தொற்றின் பாதிப்பு என்பது நாளுக்கு நாள் வீரியமடைந்து வரக்கூடிய சூழ்நிலையில் நோயாளிக்கு உயிர்காக்க பயன்படுத்தப்படும் மருந்தின் தேவை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. Tocilizumab கொரோனா தொற்றுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்து கிடையாது. ஆனால் தற்போது இந்த மருந்தின் தட்டுப்பாடு அதைவிட அதிகமாக உள்ளது.
கள்ளச்சந்தையில் இரண்டு மடங்கு விலையில் இந்த மருந்து விற்பனை செய்யப்படுவது புதிய தலைமுறை கள ஆய்வில் தெரியவருகிறது. பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உடனடியாக இந்த மருந்து கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இந்த மருந்து இருப்பு தங்களிடம் இல்லை என நோயாளிகளின் உறவினர்களிடம் தெரிவிக்கப்படுகிறது. உறவினர்கள் செய்வதறியாமல் திக்குமுக்காடி இந்த மருந்து வாங்குவதற்கு அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சில தரகர்கள் உயிர்காக்கும் இந்த மருந்தை இக்கட்டான சூழ்நிலையில் இரு மடங்குக்கு மேல் விலை வைத்து விற்பனை செய்கிறார்கள். இன்னும் சில பேர் வெளிநாடுகளுக்கு அதிக அளவிற்கு இந்த மருந்தினை பார்சல் செய்து வருகிறார்கள்.
உதாரணத்திற்கு காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ராமநாதன் என்பவர் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருங்காட்டுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து ராமநாதனுக்கு உடனடியாக மேலே குறிப்பிட்ட அந்த மருந்து செலுத்த வேண்டும். ஆனால் எங்களிடம் அந்த மருந்து தற்போது கையிருப்பு இல்லை. எனவே இந்த மருந்தை வெளியிலிருந்து வாங்கி வரவேண்டும் என உறவினரிடம் கூறியதாக கூறப்படுகிறது.
அந்த மருந்தின் விலை 40000 என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மருந்தின் தேவை அளவுக்கு அதிகமாக தற்போது இருப்பதனால் இதன் தட்டுப்பாடு மிகவும் அதிக அளவில் இருந்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், சென்னை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இந்த மருந்து குறித்து விசாரிக்கும்போது எங்கும் இந்த மருந்து இல்லை என்பது தெரியவந்தது.
சென்னையில் உள்ள ஒரு தரகரிடம் இந்த மருந்து இருப்பதாக தகவல் கிடைத்து அவரிடம் இந்த மருந்து குறித்து விசாரிக்கும்போது 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அந்த மருந்தினை 75 ஆயிரம் ரூபாய்க்கு கொடுப்பதாகவும் தற்போது இந்த மருந்தின் தேவை அதிகளவில் இருப்பதனால் ஒரு லட்ச ரூபாய் வரை இந்த மருந்தின் விலை போகிறது எனவும் கூறுகிறார்.
மேலும் சில நாட்களுக்கு முன்பு 95 ஆயிரம் ரூபாய்க்கு பத்து மருந்தினை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ததாகவும் தெரிவித்திருப்பது அதிர்ச்சியடைய வைத்தது. மருத்துவரின் எந்த பரிந்துரை கடிதமும் இல்லாமல் வெறும் பணம் மட்டும் கொடுத்தால் இந்த மருந்தினை கொடுப்பதற்கு தரகர்கள் ஏராளம் பேர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.