ஓமலூர் அருகே கிரிக்கெட் விளையாடும்போது பெண்ணின் மீது பந்தை அடித்து மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நாய்கடிச்சான்பட்டி கிராமம் உள்ளது. கொரோனா ஊரடங்கை தொடர்ந்து அப்பகுதி இளைஞர்கள் சேர்ந்து அங்குள்ள குடியிருப்பு பகுதியில் கிரிக்கெட் விளையாடி வந்துள்ளனர்.
இந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த மாதையன் மகன் குமார் என்பவர் வேண்டுமென்றே அங்குள்ள குடியிருப்பின் மீது பந்தை அடித்து வந்ததாக தெரிகிறது. அப்போது அதேபகுதியை சேர்ந்த முருகேசன் மனைவி ஜெயா என்பவர் மீது பந்து விழுந்துள்ளது. அதனால், அடிபட்ட ஜெயா, குமாரிடம் ‘பார்த்து விளையாட மாட்டாயா’ என்று கோபத்தில் கேட்டுள்ளார். அதற்கு அப்படித்தான் விளையாடுவோம் என்று கூறிய குமார், ஜெயாவுடன் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ஆத்திரடமடைந்த குமார் வீட்டிற்கு சென்று கம்பி ஒன்றை எடுத்து வந்து ஜெயாவின் நெஞ்சு, வயிறு, முதுகு ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்தினார். இதனால், ரத்த காயமடைந்த ஜெயா, வலி தங்காமல் கத்தியுள்ளார்.
இதையறிந்த அக்கம் பக்கத்தினர் ஒடி வந்துள்ளனர். இதனால் ‘இனிமே என்னிடம் மோதினால், உன்னை கொலை செய்துவிடுவேன்’என்று ஜெயாவை மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். காயமடைந்த ஜெயா ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை முயற்சி செய்த வாலிபர் குமாரை கைது செய்தனர்.