எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எங்கே போய்த் தேடினாலும், எவ்வளவு பணம் கொடுத்தாலும் எளிதில் கிடைக்காத ஒரு விஷயம் மகிழ்ச்சி. அது வெளியே இல்லை. உங்களுக்கு உள்ளேதான் இருக்கிறது. இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டிற்குள்ளேயே இருப்பதால் குடும்பத்திலும் மனதளவிலும் நிறைய பிரச்னைகள் ஏற்படுகிறது என அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஆனால் நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க இதுபோன்ற பொன்னான நாட்கள் இனி கிடைக்குமா என எத்தனை பேர் யோசிக்கிறோம். உங்களை நீங்களே மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள சில ஆலோசனைகள்…
-
காலை எழுந்தவுடன் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். இந்த நாள் எப்படி இருக்குமோ என்ற பதட்டம் வேண்டாம். என்ன நடந்தாலும் சமாளிக்கலாம் என்ற மனநிலையை உருவாக்குங்கள்.
-
காலை ஒரு அரைமணிநேர நடைப்பயிற்சி இயற்கையின் அற்புதத்தை ரசிக்க வைப்பதோடு, உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியைத் தரும்.
-
ஒரு பத்து நிமிடம் மனதை ஒருநிலைப்படுத்தி அமைதியாக அமர்ந்திருங்கள். அல்லது யோகா, தியானம் செய்யுங்கள். இது நாள் முழுதும் மனதைக் கட்டுப்பாட்டில் வைகத்திருக்கும்.
-
வீட்டில்தானே இருக்கிறோம் என நினைத்த நேரத்திற்கு கிடைத்ததை சாப்பிடாமல் காலை உணவை ராஜாவைப் போலவும், மதிய உணவை சேவகனைப் போலவும், இரவு உணவை யாசகனைப் போலவும் உண்ணுங்கள். உடல் ஆரோக்கியம்தான் மனதின் ஆரோக்கியம்.
-
சிறிய சிறிய விஷயங்களைக்கூட அனுபவித்து மனம்விட்டு நன்றாக சிரியுங்கள். மற்றவர்களையும் சிரிக்க வையுங்கள்.
-
உங்களுடைய மகிழ்ச்சியை தீர்மானிக்க உங்களைத் தவிர யாருக்கும் உரிமையில்லை.
-
குழந்தைகளுடனும், வயதில் பெரியவர்களுடனும் நேரம் செலவிடுங்கள். பிறரைப் பற்றிப் புறங்கூறுவதைத் தவிர்த்தாலே நிறைய சண்டைகளை தவிர்த்திடலாம்.
-
மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அறவே சிந்திக்க வேண்டாம்.
-
எப்போதும் நம்முடையக் கருத்துகள்தான் சரியாக இருக்கவேண்டும் என அவசியமில்லை. அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை உருவாக்குங்கள்.
-
யார்மீதும் கோபமோ, பொறாமையோ வேண்டாம். மன்னிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
-
குறைகளை மட்டும் சுட்டிக்காட்டுவதைத் தவிர்த்து கொஞ்சம் பாராட்டவும் பழகுங்கள்.
-
தவறுசெய்தால் மன்னிப்புக் கேட்க தயங்கவோ தவிர்க்கவோ வேண்டாம்.
-
நல்ல இசையைக் கேளுங்கள். மனதுக்குப் பிடித்த செயல்களில் முழுமனதோடு ஈடுபடுங்கள். வீட்டு வேலைகளில் உதவிசெய்யுங்கள்.
-
வேலையைவிட உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.