உலகமே கொரோனாவால் ஸ்தம்பித்துக் கொண்டிருக்கும் காலகட்டம் இது. வெளியே செல்லும்போது நம்மை பாதுகாக்க மாஸ்க் கட்டாயம் அணியவேண்டும் என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. இந்த சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்தி அடிக்கடி விதவிதமான வித்தியாசமான மாஸ்க்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. விலையுயர்ந்த ஃபேப்ரிக்குகளில் ஆரம்பித்து வெள்ளி, தங்கத்தில் என மாஸ்க்குகள் தயாரிக்கப்பட்டு அவ்வப்போது மக்களை கவர்ந்துவருகின்றன. அந்த வகையில் இப்போது குஜராத் சூரத்தில் உள்ள ஒரு நகைக்கடை பல லட்சம் மதிப்பிலான வைரக்கற்கள் பதித்த மாஸ்க்குகளைத் தயாரித்துள்ளது.
இது குறித்து நகைக்கடையின் உரிமையாளர் தீபக் சாக்ஸி பேசியபோது, ”இந்த ஊரடங்கு காலத்தில் தங்கள் வீட்டில் திருமணம் வைத்துள்ளதாகவும், அதற்கு மிகவும் வித்தியாசமான முறையில் மணமக்கள் அணிய மாஸ்க் செய்துகொடுக்கவேண்டும் எனவும் வாடிக்கையாளர்கள் கேட்டுக் கொண்டனர். எங்களுடைய டிஸைனர்களுடன் கலந்தாலோசித்தபோது, வைரத்தால் ஆன மாஸ்க்குகள் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என தெரிவித்தனர்.
அதன்படி, சுத்தமான வைரக்கற்கள் மற்றும் அமெரிக்க வைரக்கற்களை கொண்டும், அதேசமயம் அரசு பரிந்துரைத்த துணிகளை வைத்தும் இந்த முகக் கவசத்தைத் தயாரித்துள்ளோம். அமெரிக்க வைரக்கற்கள் மற்றும் தங்கத்தாலான முகக் கவசத்தின் மதிப்பு 1.5 லட்சம். அதில் வொயட் கோல்டு மற்றும் தங்கத்தில் அதிகளவில் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட முகக் கவசத்தின் மதிப்பு 4 லட்சம் ரூபாய். இந்த முகக் கவசங்களை சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.
இதை அநாவசியமான ஆடம்பரமாகக் கருதாமல் ஒரு முதலீடாகக் கருதவேண்டும். இதில் பயன்படுத்தியுள்ள தங்கம் மற்றும் வைரத்தை பிற்காலத்தில் நெக்லெஸ் அல்லது வேறு நகையாகக்கூட செய்துகொள்ளலாம்’’ என்கிறார். இதுபோன்ற முகக் கவசங்களை வாங்கும் வசதி உள்ளவர்கள் ஆர்வமாக வந்து வாங்கிச் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.
மாஸ்க் வாங்கிய தேவான்ஷி என்ற இளம்பெண் பேசியபோது, ”நான் கம்மல் வாங்கத்தான் வந்தேன். ஆனால் இந்த முகக் கவசங்கள் என்னை வெகுவாக கவர்ந்தன. கூடிய விரைவில் என்னுடைய உறவினர் வீட்டுத் திருமணத்திற்குப் போகவேண்டும். என்னுடைய உடைக்கு மேட்ச்சாக மாஸ்க் கிடைத்ததால் நானும் வித்தியாசமாகத் தெரிய வேண்டும் என்ற ஆசையுடன் வைர மாஸ்க் வாங்கியிருக்கிறேன்’’ என்கிறார் மகிழ்ச்சியுடன்.
ஏராளமான மக்கள் அடிப்படைத் தேவைகளையே பூர்த்தி செய்யமுடியாமல் கொரோனாவால் அழிந்துகொண்டிருக்கும் இந்த சமயத்தில் வசதி படைத்தவர்கள் தங்கள் ஆடம்பரத்தை காண்பிக்க இதுபோன்ற தங்கள் படைப்புகளை அடிக்கடி வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர்.
சமீபத்தில் மகாராஸ்டிராவின் புனேவை சேர்ந்த ஷங்கர் குரடே என்பவர் சுமார் 2.89 லட்சம் மதிப்பில் தங்கத்தாலான மாஸ்க்கை வெளியிட்டு ட்ரெண்ட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.