குஜராத்தில் ஊரடங்கை மீறி இரவு நேரத்தில் வெளியே வந்த பாஜக அமைச்சர் மகனிடம் பெண் காவலர் ஆவேசமாக பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் கான்ஸ்டபிளாக பணியாற்றுபவர் சுனிதா. இவர் கடந்த புதன் கிழமை இரவு சூரத் நகர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி காரில் வந்த சில இளைஞர்களை தடுத்து நிறுத்தினார். அவர்கள் காவலர் சுனிதாவுடன் வாக்குவாதம் செய்துவிட்டு, பின்னர் குஜராத் மாநில சுகாதாரத்துறை துணை அமைச்சரும், பாஜகவை சேர்ந்தவருமான குமார் கானானியின் மகன் பிரகாஷை போன் செய்து வரவழைத்தனர்.
பிரகாஷ் வந்து தனது நண்பர்களை உடனே விடுவிக்குமாறு கூற, சுனிதா மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவதாம் ஏற்பட, ஆவேசமடைந்த காவலர் சுனிதா, “ஊரடங்கு நேரத்தில் உங்களை வீட்டை விட்டு வெளியே செல்ல அதிகாரம் அளித்தது யார் ? ஊரடங்கை மீறி பிரதமர் மோடியே வந்தாலும் நான் தடுத்து நிறுத்துவேன். இரவு முழுவதும் காவல் காக்கும் போலீஸ் என்ன முட்டாளா ?” என்று சீறினார்.
இதில் ஆத்திரமடைந்த அமைச்சர் மகன், “நான் நினைத்தால் உன்னை இந்த இடத்திலேயே ஒரு வருடம் நிற்க வைப்பேன்” என எச்சரித்துள்ளார். அவர்கள் பேசிய வாக்குவாதம் முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். நெட்டிசன்கள் அமைச்சர் மகனுக்கு கண்டனங்களையும், தனி ஒரு பெண்ணாக அமைச்சர் மகன் என்றாலும் எதிர்த்து நின்ற காவலர் சுனிதாவுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Here is the video of arguments by Lady cop and Gujarat Health Minister Kumar Kanani’s son Prakashpic.twitter.com/TN7bxoabLX
— Mohammed Zubair (@zoo_bear) July 12, 2020
இந்த சம்பவத்துக்குப் பின்னர் சுனிதா பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் பணியை ராஜினாமா செய்துள்ளார். அவரிடம் குஜராத் காவல்துறை கட்டாயம் செய்து ராஜினாமா கடிதத்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளித்துள்ள அமைச்சர் குமார் கானானி, தனது மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற அவரது மாமனாரை காண சென்றதாக கூறியுள்ளார். அவரை புரிந்துகொள்ளமால் பெண் காவலர் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அப்போது தான் இருவருக்கும் வாக்குவாதம் நடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.