இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் 39-வது பிறந்த நாள் இன்றாகும். அதனை அவரது ரசிகர்கள் #HappyBirthdayDhoni என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
2004-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியில் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார் தோனி. நீளமான முடி, கட்டுமஸ்தான உடல் என ஆரம்பத்திலேயே ரசிகர்கள் பலரை கவர்ந்துவிட்டார். அதன்பின்னர் பேட்டிங்கில் அவர் காட்டிய அதிரடி, அவரது ரசிகர்களின் எண்ணிக்கையை உயர்த்தியது.
2007-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பங்களாதேஷ் மற்றும் இலங்கையிடம் தோற்று முதல் சுற்றிலேயே வெளியேறியது. இதனால் ரசிகர்கள் கொந்தளித்து தோனி உள்ளிட்டோரின் வீடுகளில் கற்களை எறிந்தனர். ஆனால் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. இந்த வெற்றி தோனிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியது. டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றதும் அதற்கு ஒரு முக்கிய காரணம்.
இதேபோன்று 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது. அதுவும் இறுதிப்போட்டியில் சிக்ஸர் அடித்து தோனி அந்த வெற்றியை இந்தியாவிற்கு பெற்றுத்தந்தார். இதன் மூலம் சிறந்த ஃபினிஷர் என்ற பெயரையும் அவர் பெற்றார். இதற்கிடையே ஐபிஎல் போட்டிகளில் சென்னையின் அணியின் கேப்டனான விளையாடி, கோப்பைகளை வென்றதால் அவருக்கு தமிழகத்தில் அசைக்க முடியாத ரசிகர்கள் பட்டாளம் உருவாகியிருந்தது.
ஒரு கட்டத்தில் தோனியின் தலைமையில் இந்திய அணி வெற்றிகளை வாரிக்குவிக்க துவங்கியது. அவரது கேப்டன்ஷிப் வியூகம் எப்படிப்பட்ட அணியையும் வீழ்த்தும் சூட்சமத்தை கொண்டிருந்தது. அது தான் இன்றும் அவர் அணியில் இருக்க காரணம். தற்போது அவரை ஓய்வு பெற வேண்டும் என ஆயிரக்கணக்கானோர் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கின்றனர்.
ஆனால் ‘என்றுமே தல தோனி’ தான் எனக் கோடிக்கணக்கானோர் அவருக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்பதே உண்மை. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக வெறித்தனமான ரசிகர்களை கொண்ட ஒரு வீரர் என்றால் அது தோனிதான்.
இந்நிலையில் இன்று தோனியின் 39 வது பிறந்த நாள் ஆகும். இதைக் கொண்டாடும் வகையில் சமூக வலைத்தளங்களை தோனியின் ரசிகர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அதிலும் சென்னை ரசிகர்கள் ‘தல தல’ என்று தலையில் வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பின்பு சர்வதேசப் போட்டிகளில் ஏதும் தோனி பங்கேற்கவில்லை. இந்நிலையில் அவரது ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளில் தோனியை பார்ப்பதற்கு ஆவலாக காத்திருக்கின்றனர். விரைவில் “தல”யை களத்தில் பார்ப்போம் நாமமும் ரசிகராய்.