நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இளைஞர் ஒருவரை திசையன்விளை உதவி காவல் ஆய்வாளர் பிரதாப் தாக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை இந்தியன் ஒவர்சீஸ் வங்கி முன்பு சீருடையில் இல்லாமல் நின்ற காவலர் அந்த பகுதி சாலையில் ஓரமாக இருசக்கர வாகனத்தில் நிற்கும் இளைஞரை சீருடை இல்லாமல் தாக்குகிறார். சீருடை இல்லாததால் அந்த நபர் எஸ்.ஐ அடிக்கும்போது தடுக்க முற்படுகிறார். அதற்கு எஸ்.ஐ.யுடன் வந்தவர்களும் சேர்ந்து அந்த இளைஞரை தாக்குகின்றனர்.
இந்த காட்சியை எதிர்புறம் இருந்த கடையில் இருந்து ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த விடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எதற்காக அந்த இளைஞரை எஸ்.ஐ பிரதாப் தாக்கினார் என்பது குறித்து தகவல் எதுவும் இல்லை. ஆனால் அந்த வீடியோ எடுத்த விபரம் திசையன்விளை உதவி ஆய்வாளர் பிரதாப்பிற்கு தெரியவர வீடியோ எடுத்த நபரிடமிருந்த செல்போனை பிடுங்கி உடைத்து விட்டு அவருக்கு 10 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.
சாத்தான்குளத்தில் உதவி ஆய்வாளர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் சம்பவத்தின் விசாரணை உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சாத்தான்குளத்தின் அருகே ஒட்டியுள்ள உள்ள நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.