சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களுடன் பழகி அவர்களின் புகைப்படத்தை ஆபாசமாக உருமாற்றம் செய்து பணம் பறித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்
இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு கும்பல் பெண்களிடம் நட்பாகப் பழகி அவர்களின் புகைப்படங்களை ஆபாசமாக உருமாற்றம் செய்து பணம் பறிப்பதாக ராமநாதபுரம் எஸ்பியின் பிரத்யேக எண்ணுக்கு ரகசிய புகார் ஒன்று வந்தது. தன்னிடமும் அந்தக் கும்பல் மிரட்டி பணம் பறித்துள்ளதாகப் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். புகாரின் படி, இன்ஸ்டாவில் நட்பாக அறிமுகமாகும் அந்தக்கும்பல் பேசிப்பழகி பின்னர் பெண்களின் புகைப்படங்களைப் பெற்றுக்கொள்கிறது.
அதனை மார்பிங் முறையில் ஆபாசமாக உருமாற்றம் செய்து பின்னர் சம்பந்தப்பட்ட பெண்களிடம் மிரட்டல் விடுக்கிறது.இதன் மூலம் அந்தக்கும்பல் லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் வருண் குமாரின் அறிவுறுத்தல் படி சமூக ஊடக குற்றவாளிகளின் சமூக வலைத்தளங்கள், வங்கிக் கணக்குகள், இணையதள வங்கி பரிவர்த்தனைகளைத் தனிப்படையினர் தீவிரமாகக் கண்காணித்தனர் .
இதில், ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்று வரும் மாணவரான கீழக்கரையைச் சேர்ந்த முகமது முகைதீன் தலைமையில் கும்பல் ஒன்று செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
பெண்களை மிரட்டிப் பறிக்கும் தொகையில் நண்பர்களுக்குச் சிறிது கமிஷன் கொடுக்கப்பட்டு மீதமுள்ள தொகையானது முகமது முகைதீன் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக முகமது முகைதீன், புதுச்சேரி முகமது இப்ராஹிம் நூர், சென்னை பாசித் அலி, திருநெல்வேலி ஜாசம் கனி, கீழக்கரை பார்டு பைசுல், நாகப்பட்டினம் முகமது ஜாசிம் உள்ளிட்ட ஆறு பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களில் திருநெல்வேலி ஜாசம் கனி, கீழக்கரை பார்டு பைசுல் ஆகிய இருவரைக் கைது செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
நான்கு குழந்தை திருமணங்களை வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!