இந்தியாவில் தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியா – சீனா இடையேயான எல்லைப் பிரச்னைக்கு எதிராகவும் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு நிகழ்வுகள் முக்கியத்துவம் பெற்றிருக்கும் நிலையில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டறிவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்களுடன் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அதன்பின்னர் பேசிய பிரதமர் மோடி, “அன்லாக் 2.O கொண்டு வரப்பட்டுவிட்டது. பிற உலக நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா சீரான நிலையில் உள்ளது. சரியான நேரத்தில் கொண்டு வரப்பட்ட ஊரடங்கு காரணமாக பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. பல லட்சக்கணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.
நாட்டில் விரைவில் மழைக்காலம் தொடங்க உள்ளது. இந்தக் காலகட்டத்தில் காய்ச்சல், சளி போன்றவை சாதாரணமாகவே வரும். இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். பொதுமுடக்கக் காலகட்டத்தில் மக்கள் பலர், மாஸ்க் இல்லாமல் வெளியே வருகிறார்கள். கட்டுப்பாட்டு மண்டலங்களில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வகுக்கப்பட்ட விதிகளைப் பின்பற்றாதவர்களை, நாம் தடுத்து அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
மக்கள் பலர், பொதுமுடக்கத்தைச் சரியாகப் பின்பற்றவில்லை. இந்தக் காலகட்டத்தில் நடக்கும் சிறு தவறுகூட பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும். அரசின் விதிமுறைகளை மீறுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். ஒரு நாட்டில் கொரோனா விதிமுறைகள் மீறியதாக பிரதமருக்கு அபராதம் விதிக்கப்பட்டதைப் பார்க்கிறோம்” என்றார்.
தொடர்ந்து பேசியவர், “நாட்டின் சட்டத்தைவிட யாரும் உயர்ந்தவர்கள் இல்லை. சாமானியன் முதல் பிரதமர் வரை அனைவருக்கும் பொதுவானதுதான் விதிகள். கொரோனாவால் ஏழை மக்கள் பாதிப்பு அடையவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டியது மிக முக்கியம். கொரோனா ஊரடங்கு சமயத்தில் ஏழை மக்களுக்காக ரூ.1.75 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்தியாவில் 80 கோடிக்கும் அதிகமான ஏழைகளுக்கு மூன்று மாதத்திற்குத் தேவையான ரேஷன் பொருள்கள் இந்தப் பெருந்தொற்று காலத்தில் வழங்கப்பட்டுள்ளன.
Also Read: மன் கி பாத்: `2020-ம் ஆண்டு, எல்லைப் பிரச்னை, கொரோனா!’ – பிரதமர் மோடி உரை
வரும் நவம்பர் மாதம் வரை மக்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படும். 5 கிலோ கோதுமை அல்லது அரசி, கடலைப் பருப்பு உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும். இலவச ரேஷன் பொருள்களுக்காகக் கூடுதலாக 90 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும்” என்றார்.
தொடர்ந்து பேசிய மோடி, “ஜூலை முதல், திருவிழா சீசனும் தொடங்குகிறது. இதனால் வீடுகளில் செலவினங்கள் அதிகரிக்கும். இதனால் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா நவம்பர் இறுதிவரை நீட்டிக்கப்படும். 18 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், “இந்த அன்லாக் காலகட்டத்தில் பொருளாதார மேம்பாட்டுக்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். நேர்மையாக இந்தக் காலகட்டத்திலும் வரி கட்டியவர்களால்தான் இந்த இக்கட்டான சூழலை எதிர்கொள்ள முடிந்தது” என்றும் தெரிவித்தார்.
Also Read: மன் கி பாத்: `2020-ம் ஆண்டு, எல்லைப் பிரச்னை, கொரோனா!’ – பிரதமர் மோடி உரை