விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் பங்களிப்பை அதிகரிக்க, இஸ்ரோ போலவே ; Indian National Space Promotion and Authorisation Centre (IN-SPACe) எனும் புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கியிருக்கிறது இந்திய அரசு. இந்த முயற்சி மூலம் தனியார் பங்களிப்பு விண்வெளி ஆராய்ச்சியில் அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது. விண்வெளியில் தனியார் பங்களிப்பு என்பது அரசால் முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த IN-SPACe அமைப்பும் இஸ்ரோவைப் போலவே தன்னிச்சையாகச் செயல்படும். இஸ்ரோ, IN-SPACe ஆகிய இரண்டுமே இந்திய விண்வெளி ஆணையத்துக்குக் கீழே வரும். இன்னும் 6 மாதத்திற்குள் இந்த அமைப்பு செயல்பாட்டுக்கு வந்துவிடும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேகமாக வளர்ந்து வரும் உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு மூன்று சதவிகிதம் மட்டுமே இருக்கிறது. மொத்தம் சுமார் 360 பில்லியன் டாலர் மதிப்புடையது இந்த `Space Economy’. இந்த சந்தையில் வெறும் இரண்டு சதவிகிதம் மட்டுமே ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் ஏவுதள சேவைகளுக்காகச் செலவழிக்கப்படுகிறது.
செயற்கைக்கோள் சார்ந்த சேவைகளுக்கான செலவுகளும் மற்றும் பூமியிலிருந்து இந்த செயற்கைக்கோள்களைக் கண்காணிக்கும் மையங்களுக்கான செலவுகளும்தான் அதிகம். இதில் தனியார் பங்களிப்பு இருந்தால் இன்னும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி வேகமெடுக்கும், மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் உலகமெங்கும் Space X போன்ற தனியார் விண்வெளி நிறுவனங்கள் பெரும் முதலீடுகளை செய்திருக்கின்றன, புதிய முன்னெடுப்புகளை எடுத்திருக்கின்றன. இந்த IN-SPACe இந்தியாவையும் அந்த பாதியில் எடுத்துச்செல்லும்.
பெங்களூரைத் தலைமை இடமாக கொள்ளப்போகும் இந்த அமைப்பு, விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் செயல்பாடுகளை அதிகரிக்க உதவும்.
Also Read: இஸ்ரோ மையப் பொறியாளருக்குக் கொரோனா! -காரணம் தெரியாமல் கலங்கும் அதிகாரிகள்
இப்படி செய்வதன் மூலம் இஸ்ரோவின் பங்கு குறைந்து, முக்கியமான முடிவுகளில் தனியார் தலையீடு அதிகம் இருக்காதா? என்று கேள்வி எழுப்பப்பட்டுவந்தது. இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், “நாடு எதிர்நோக்கும் சீர்திருத்தத்தை அடைய, விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிப்பதும், முன்னணி நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் நிலைநிறுத்தும்’’ என்றார். பூமி கண்காணிப்பு, விண்வெளி தரவுகள் போன்ற வழக்கமான வேலைகள் IN-SPACe க்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.