மனைவிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த தனியார் மருத்துவமனையைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் பொன்மலை கல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மனைவி பூங்கோதை. இவர் வீட்டில் தவறி விழுந்து உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருச்சி தில்லைநகர் 5 வது சந்தில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க நிர்வாகம் மறுப்பு தெரிவித்தாகச் சொல்லப்படுகிறது. மேலும் சுமார் 2 லட்சத்திற்கும் மேல் பணம் கட்டியும் பூங்கோதைக்கு உரிய சிகிச்சை அளிக்காமல், தொடர்ந்து கட்டணம் மட்டும் வசூலித்து வந்தாகவும் கூறப்படுகிறது.
இதனால் வேதனையடைந்த நடராஜன் தனியார் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து தனது மகன் தமிழரசனுடன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னிலையில் தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்து அழைத்துச் சென்றனர்.