இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கான மருந்தை தயாரிப்பதற்கு இரு நிறுவனங்களுக்கு இந்திய மருந்து கட்டுப்பாடுகள் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி ஊசியாக செலுத்தப்படும் மருந்துக்கு 6000 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்தை அளிப்பதற்கு, அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து ரெம்டெசிவர் மருந்தை தயாரிப்பதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த கிலியட் சயன்ஸ் என்ற நிறுவனத்துடன் இந்தியாவைச் சேர்ந்த ஹெட்டரோ மற்றும் சிப்ளா நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்தன.
இந்நிலையில், இரு இந்திய நிறுவனங்களும் ரெம்டெசிவர் மருந்துகளை தயாரிப்பதற்கு இந்திய மருந்து கட்டுப்பாடுகள் அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக ஹெட்டரோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ரெம்டெசிவர் மருந்து இந்தியாவில் கோவிபோர் என்ற பெயரில் வெளியிடப்படும் என்றும் ஊசி வழியாக செலுத்தும் 100 மில்லி கிராம் மருந்து 5000 ரூபாய் முதல் 6000 ரூபாய் வரையில் விற்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
கோவிபோர் மருந்து, மருத்துவமனை மற்றும் அரசு மூலமே விற்பனை செய்யப்படும் என்றும் சில்லரை மருந்து கடைகளில் கிடைக்காது என்றும் ஹெட்டரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.இதேபோல சிப்ளா நிறுவனம் தயாரித்துள்ள சிப்ரெமி மருந்தும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.எனினும் ஹெட்டரோ போல் அல்லாமல், வெளி சந்தைகளிலும் சிப்ரெமி மருந்து கிடைக்கும் என சிப்ளா நிறுவனம் தெரிவித்துள்ளது.இதனிடையே லேசான அறிகுறி உள்ள கொரோனா நோயாளிகளுக்கு வழங்குவதற்காக ஃபவிபிரோவியார் என்ற பெயரில் மாத்திரையை கிளன்மார்க் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் ஒரு மாத்திரை விலை 103 ரூபாயாகும்.