2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் விராட் கோலி தடுமாறியபோது அவருக்கு பக்கபலமாக தோனி இருந்தார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.
கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லட்சுமணன் உடன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் “கிரிக்கெட் கணெக்டட்” நிகழ்ச்சியில் கவுதம் காம்பீர் கலந்துரையாடினார். அப்போது 2014 ஆம் ஆம் ஆண்டு இங்கிலாந்து தொடர் நினைவலைகள் பகிர்ந்துக்கொண்டார். அந்தத் தொடரில் விராட் கோலி 10 இன்னிங்ஸ் சேர்த்து 134 ரன்களை மட்டுமே எடுத்தார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வதற்கு மிகவும் சிரமப்பட்டார்.
அது குறித்து பேசிய காம்பீர் “2014 மோசமான சுற்றுப் பயணமாக இருந்தது. நானும் அப்போது அணியில் இருந்தேன். அந்த சுற்றுப் பயணத்துடன் பலரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்திருக்கும். ஆனால் வீரர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அரணாக இருந்தார் தோனி. அதவும் கோலிக்கு அவர் மிகவும் உறுதுணையாக இருந்தார்” என தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்த காம்பீர் “அடுத்த முறை கோலி இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் அசத்தினார். அதுவும் பிரம்மிங்கம் மைதானத்தில் கோலி அடித்த சதம் இப்போதும் என்னால் மறக்க முடியாதது. அவ்வளவு சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார் கோலி. அதன் பின்புதான் கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டாராக கோலி மாறினார். அந்தத் தொடரில் 8 இன்னிங்ஸில் 692 ரன்களை குவித்தார்” என்றார் அவர்.