கொரோனா வைரஸ் சமூகப் பரவலை இன்னும் எட்டவில்லை எனக் கூறப்பட்டுவந்தாலும், நாளுக்கு நாள் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்ட 5 பேரில் 1 நபருக்கு உயிருக்கு ஆபத்து என்கிறது லான்செட்டின் சமீபத்திய ஆய்வு. காரணம், 5-ல் ஒரு நபருக்கு உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் ஏதாவது காணப்படுகிறது.
ஏற்கெனவே, வேறொரு நாள்பட்ட நோயால் பாதிப்படைந்தவர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டால் மற்றவர்களைவிட உயிருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்று அந்த சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டோருக்கும் வயதானோருக்கும் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.
அதிலும், பெண்களைவிட ஆண்களுக்கே கொரோனா தொற்றால் ஏற்படும் ஆபத்துகள் இருமடங்கு அதிகம் என்கிறது இந்த ஆய்வு. இதய நோய், நாள்பட்ட சிறுநீரக நோய், நீரிழிவு நோய் மற்றும் நாள்பட்ட சுவாச நோயால் அவதியுறுபவர்களுக்குக் கொரோனா தொற்றின் தாக்கம் அதிக வீரியமுடையதாக இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
சமீபத்தில் இந்தியாவில் நடந்த மற்றொரு ஆய்வொன்றில் இந்தியாவில் குறைந்தது 21.5 சதவிகித மக்கள் நாள்பட்ட நோய்களால் அவதியுறுவது தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் கொரோனாவால் லட்சக்கணக்கான மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தேவையான பாதுகாப்பு உபகரணங்களையும் நடவடிக்கைகளையும் அரசாங்கங்கள் முன்கூட்டியே எடுக்க வேண்டியதன் அவசரத்தை இந்த ஆய்வு குறிப்பால் உணர்த்தியிருக்கிறது. ஆனால், நாள்பட்ட நோய் பாதிப்புள்ளவர்கள் எல்லாருக்கும் கடுமையான அறிகுறிகள் ஏற்படும் என்பது நிச்சயம் அல்ல.
அவ்வாறு நடந்தால், ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையான 780 கோடியில் பில்லியனில் 34.9 கோடி மக்களுக்கு மருத்துவமனை வசதியுடன் தீவிர சிகிச்சை கொடுக்கும் நிலை ஏற்படும்.
இது ஒருபுறம் இருக்க, கொரோனா நாளுக்குநாள் மாறுபட்டுக்கொண்டே(mutation) வருவது கண்டறியப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் நுண்ணோக்கியில் பார்க்கப்பட்ட கொரோனா வைரஸுக்கும் ஏப்ரலில் கண்டறியப்பட்ட வைரஸுக்கும் நிறைய வேற்றுமைகள் இருப்பது தெரியவந்திருக்கிறது.
அதன் கூர்முனைகள் போன்ற வெளிப்புறத் தோற்றம் வெகுவாக வலுவடைந்திருப்பதாகவும்,அவற்றின் அடர்த்தியும் எண்ணிக்கையும் 4 அல்லது 5 மடங்கு அதிகரித்திருப்பதாகவும் ஆய்வாளர் கூறியுள்ளார்.
Also Read: கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று வராமல் தடுப்பது எப்படி? மருத்துவர் கைடன்ஸ்!
அதுமட்டுமன்றி மாறுபட்ட வைரஸ்கள் முன்பைவிட அதிக வீரியத்துடன் செல்களை உடைத்து எளிதாக உடலுக்குள் நுழைவதும் கண்டறியப்பட்டுள்ளது. நுரையீரலை எளிதில் பாதிக்கும் கொரோனா வைரஸ், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் (pulmonary hypertension) மற்றும் புகை பிடிப்பவர்களுக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பது முன்பே தெரிந்ததே.
கொரோனா தொற்றின் அறிகுறிகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் ஆபத்தை ஏற்படுத்தாது என்று நம்புவதற்கில்லை என்கிறார் முன்னணி ஆராய்ச்சியாளர் மைக்கேல் பார்சன்.