இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி போட்டி முடியும் நேரத்தில் தான் தனது ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்குள் தோனி வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐபிஎல் போட்டிகள் தள்ளிப்போனதால் அவர் அணியில் இடம்பெறுவது நடைபெறவில்லை. இதைத்தொடர்ந்து தோனி குறித்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் தொடர்ந்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இஎஸ்பிஎன் கிரிக்கெட் இணையதளத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நடத்திய நிகழ்ச்சியில் ராகுல் டிராவிட் பங்கேற்றார்.
அப்போது பேசிய டிராவிட், “தோனியின் ஆட்டத்தைப் போட்டி முடியும் நேரத்தில் தான் பார்க்க வேண்டும். அப்போது தான் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். முக்கியமான நேரத்தில் சரியாக ஆடுவார். ஆனால் போட்டியின் முடிவு குறித்து அவர் பெரிதும் மனதில் வைத்துக்கொள்ளமாட்டார். போட்டி முடியும் வரை விளையாட வேண்டும் என்று மட்டுமே நினைப்பார்” என்றார்.
அத்துடன், தோனியைப் போன்ற மனநிலையை அனைவரும் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்றும், அதற்காகப் பயிற்சி எடுக்க வேண்டும் எனவும் டிராவிட் தெரிவித்தார். தான் அதுபோன்ற மனநிலையை ஒருபோதும் கொண்டிருந்ததில்லை எனவும், தோனி எப்படி அவ்வாறு இருந்தார் என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் இருப்பதாகவும் கூறினார்.