விராட் கோலியைப் போல எதிர்காலத்தில் சிறப்பாக விளையாட முயற்சி செய்வேன் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் பேட்ஸ்மேன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியுடன், பாகிஸ்தான் இளம் வீரர் பாபர் அசாமை ஒப்பிட்டு பலரும் அண்மைக்காலமாகப் பேசி வருகிறார்கள். இந்நிலையில் “கிரிக்பஸ்” இணையதளத்துக்காக வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவுடன் பேசிய பாபர் அசாம் பல்வேறு விஷயங்களை, பகிர்ந்துள்ளார். அதில் கோலியுடனான ஒப்பீடு குறித்தும் பேசியுள்ளார்.
அதில் “உலகளவில் இருக்கும் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் விராட் கோலி. அவரோடு ஒப்பிடப்படும் அளவிற்கு நான் வளர்ந்துவிடவில்லை. இன்னும் நான் நிறையச் சாதிக்க வேண்டும். அவரைப் போல ஆக நான் முயற்சி செய்வேன். என் நாட்டிற்காக நிறையப் போட்டிகளை வென்று கொடுப்பதற்கு முயல்வேன். நான் ரன்கள் ஸ்கோர் செய்வது மற்ற வீரர்களோடு ஒப்பிடப்படுவதற்காக அல்ல” என்றார்.
இது குறித்து மேலும் தொடர்ந்த பாபர் அசாம் ” எனக்காகவும், என் அணிக்காகவும், என் ரசிகர்களுக்காகவுமே நான் ரன்களை எடுக்கிறேன். என் ஆட்டத்தின் மூலம் எனது ரசிகர்களை மகிழ்வித்து, அணியை வெற்றி பெறச் செய்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.