இந்த கொரோனா ஊரடங்கு காலம் பலருடைய வாழ்க்கையில் பல மாறுதல்களையும் திருப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஹரியானாவில் இருந்து காணாமல் போனவரை அவர்கள் குடும்பத்தோடு சேர்த்து வைத்து, திருச்சி காவல் அதிகாரி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
ஹரியானா மாநிலம் பஹதுர்ஷா மாவட்டத்தை சேர்ந்தவர் நிதேஷ். இவருடைய தந்தை சுபோஸ் சர்மா. சில நாட்களுக்கு முன்பு நிதேஷை காணவில்லை என ஹரியானா மாநிலத்தில் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நிதேஷை தேடி வந்தனர்.
இந்நிலையில் திருச்சி கண்டோன்மெண்ட் காவல் உதவி ஆணையர் மணிகண்டன், திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பஞ்சப்பூர் அருகே நிதேஷை கண்டுள்ளார். பின் அவரை விசாரித்து அழைத்து வந்து இரண்டு நாட்களுக்கு புது ஆடைகள் எடுத்து கொடுத்து கங்காரு கருணை இல்லத்தில் சேர்த்தார்.
இதைத்தொடர்ந்து திருச்சி எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையம் மூலம் ஹரியானாவிற்கு தொடர்பு கொண்டு நிதேஷ் கண்டறியப்பட்ட தகவலைக் கொடுத்து, அவர் இங்கு இருப்பதையும் தெரிவித்துள்ளார். இதையடுத்து மீட்கப்பட்ட நிதேஷ், கடந்த 5ம் தேதி ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் ஜான்சிக்கு, காவல்துறை உதவி ஆணையர் மணிகண்டன், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உதவியோடு திருச்சியிலிருந்து அனுப்பப்பட்டார். நேற்று ஜான்சி ரயில்நிலையம் சந்திப்பில் தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்துள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கில் பொதுமக்களை கட்டுப்படுத்துவது, பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது போன்ற சிரமமான செயல்களில் காவல்துறை ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அதையும் தாண்டி மனிதாபிமானத்துடன் மூன்று மாதமாக மொழி தெரியாத இடத்தில் வந்து காணாமல் போன ஒருவரை மீண்டும் அவர் குடும்பத்தாருடன் சேர்த்து வைத்த இந்த உதவி ஆணையரின் மனித நேயமிக்க செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது.