தேனி மாவட்டத்தில், விவசாயத்துக்கு பிரதானமாகப் பயன்படும் அணைகள் எனப் பார்த்தால், மஞ்சளாறு அணை, சண்முகாநதி அணை, வைகை அணை, சோத்துப்பாறை அணை ஆகியவையே. ஆனால், இந்த அணைகளைத் தூர்வாராததால், உரிய முறையில் நீரைச் சேமிக்க முடியவில்லை என வருத்தம் தெரிவிக்கிறார்கள் விவசாயிகள். அதனால், உடனடியாக அணையைத் தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள்.
Also Read: `போக்ஸோ சட்டத்தில் கைதான தேனி அ.தி.மு.க நிர்வாகி’ – கட்சியை விட்டே நீக்கிய தலைமை
இதுகுறித்து நம்மிடம் பேசிய மஞ்சளாறு அணை பாசனப்பகுதி விவசாயி விஜயகுமார், “மஞ்சளாறு அணையின் மொத்த உயரம் 57 அடி. கொள்ளளவு 487.35 மில்லியன் கன அடி. தற்போது அணையில் 20 அடி வரை மணல் சேர்ந்துள்ளது. சமீபத்தில், மும்பையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் உதவியோடு, அணையில் உள்ள மணல் அளவைக் கணக்கிட்டார்கள். தொடர்ந்து தூர்வாரும் பணிகள் ஏதும் நடக்கவில்லை. மேலும், அணையைத் தூர்வாரினால், தண்ணீர் சேமிப்பு அதிகரிப்பு ஒருபுறம் என்றால், வளமான மண், விவசாயிகளுக்குக் கிடைக்கும். தேனி மாவட்ட விவசாயிகள் மட்டுமல்லாமல், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளும் இதனால் பயனடைவார்கள்” என்றார்.
Also Read: `தாம்பூலப் பைக்கான செலவைவிடவும் குறைவு!’ – வாழ்த்த வந்தவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தேனி மணமக்கள்
சண்முகாநதி அணை பாசன விவசாயி ஒருவர் பேசும்போது, “தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர், இப்பகுதிக்கு வந்தபோது, அணை கட்ட வேண்டும் என விவசாயிகள் முன்வைத்த கோரிக்கையை அடுத்து, அணைக்கான திட்டம் தீட்டப்பட்டது. என்ன காரணம் எனத் தெரியவில்லை திட்டம் கைகூடவில்லை. விவசாயிகளின் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு அணை கட்டப்பட்டது. கூடவே, அணையில் இருந்து ஓடைப்பட்டி வரை 13 கிராமங்கள் பயன்பெறும் வகையில் 1,500 ஏக்கர் பாசன வசதி பெறும் 18.3 கி.மீ தூர கால்வாய் கட்டப்பட்டது. கால்வாய் பராமரிக்கப்படாமல், தண்ணீர், ஓடைப்பட்டி வரை செல்வதில்லை. தென்மேற்குப் பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில், சண்முகாநதி அணைக்குத் தண்ணீர் அதிகமாகவே வரும். அதை சேமித்து வைக்க, அணையைத் தூர்வாருவது அவசியம்” என்றார்.
Also Read: `ஒரு மாத சம்பளம்; பயணிகளுக்கு இலவச மாஸ்க்!’ – அசத்தும் தேனி அரசுப் பேருந்து நடத்துநர்
வைகை பாசன விவசாயிகள் சிலர் நம்மிடையே பேசும்போது, “ஐந்து மாவட்ட மக்களின் பாசன மற்றும் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வது வைகை அணைதான். அணையில் உள்ள மணலை எடுத்து, அணையைத் தூர்வார வேண்டும் என ஐந்து மாவட்ட மக்களும் விவசாயிகளும் பல முறை கோரிக்கை வைத்துவிட்டோம். ஏன், கடுமையாகப் போராட்டங்களிலும் ஈடுபட்டோம். ஆனால், இன்று வரை அதற்கான எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகள் நினைத்தால், வைகை அணை மட்டுமல்ல, தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளையும் தூர்வார முடியும். அதற்கான முயற்சியை அவர்களால் செய்ய முடியும்” என்றனர்.
Also Read: கிடப்பில் போடப்பட்ட வைகை அணை – ஆண்டிபட்டி கூட்டுக்குடிநீர் திட்டம்!
இது தொடர்பாகப் பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் விளக்கம் கேட்டோம். “அணைகளை தூர்வார வேண்டும் என்று எங்களுக்கும் விருப்பம்தான். ஒவ்வோர் அணையிலும் எவ்வளவு மணல் உள்ளது எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது அரசின் கொள்கை முடிவு சார்ந்த விவகாரம். அரசு முடிவெடுத்து தூர் வார உத்தரவிட்டால் அடுத்த நாளே பணிகள் ஆரம்பித்துவிடும்” என்றார்.