பாகிஸ்தான் கராச்சியில் விமான விபத்துக்குள்ளானதில், இரண்டு நபர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் சிந்துப் பகுதியைச் சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் கராச்சி நகரில் உள்ள ஜின்னா கார்டனில் நேற்று இரவு பயணிகளை ஏற்றிவந்த விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 97 நபர்கள் உயிரிழந்தனர். இதில் 9 வயதுக் குழந்தை 31 பெண்களும் அடங்குவர். அந்தரத்தில் வேகமாக வந்த விமானம் முதலில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த செல்போன் டவர் மீது மோதியதாகவும் அதன் பின்னர் அங்கிருந்த வீடுகளில் விழுந்ததாகவும் விபத்தை நேரில் பார்த்த ஷகில் அகமது கூறியுள்ளார்.
இது குறித்து எடி என்ற அறக்கட்டளையைச் சேர்ந்த பைசல் எடி என்பவர் கூறும் போது “25 முதல் 30 வீடுகள் விபத்தில் சேதமாகியுள்ளன. அதிலிருந்தவர்கள் தீக்காயங்களுடன் இருந்தார்கள்” என்று கூறினார்.
விமான விபத்தையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் அஸ்ரா கூறும் போது ”நேற்று இரவு விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த உடல்களில் விமானத்தில் பயணித்தவர்களின் உடல்கள் எத்தனை, விமானம் விழுந்த பகுதியில் வசித்து வந்தவர்களின் உடல்கள் எத்தனை என்பது குறித்த விவரங்கள் தெரிய வரவில்லை. இந்த விபத்தில் 97 நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில் 2 நபர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் பஞ்சாப் வங்கியின் தலைவர் ஜாபர் மசூத். இன்னொருவர் விமானம் விழுந்த பகுதியில் வசித்தவர்” என அவர் கூறினார்.