மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழக எல்லையான பூங்குளம் பகுதியில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு, நெல்லை தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக ஓடி புன்னக்காயல் என்ற இடத்தில் தமிழக எல்லையிலேயே கடலில் கலக்கிறது.
பிற மாநிலங்களுடன் எல்லைத் தகராறு இல்லாத தாமிரபரணி ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடுவதால் விவசாயத்துக்கும் குடிநீருக்கும் இரு மாவட்ட மக்களுக்கும் பயனளிக்கிறது. இந்த ஆற்றில் ஓடும் தண்ணீரின் நிறம் கடந்த சில தினங்களாக செந்நிறமாக மாறியுள்ளது.
Also Read: `தாமிரபரணி ஆற்றை எதிர்காலத்தில் வரைபடத்தில் மட்டுமே பார்க்க முடியும்!’ – நீதிபதிகள் வேதனை
கொரோனா ஊரடங்கு காரணமாக ஆலைகள் அனைத்தும் இயங்காததால் கழிவுகள் எதுவும் கலந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் கூட அம்பாசமுத்திரம் பகுதியில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வரையிலும் ஆற்றின் நிறம் மாறியிருக்கிறது.
ஆற்றுக்குள் உறை கிணறுகள் அமைத்து குடிநீர் தேவைக்காக எடுக்கப்படுகிறது. உறை கிணற்றைச் சுற்றிலும் உள்ள மணலில் தண்ணீர் இயற்கையாகவே சுத்திகரிக்கப்படுகிறது.. அதனால் குடிநீருக்கு எடுக்கப்படும் இடங்களில் தண்ணீர் சுத்தமாக இருக்கும்.
சில தினங்களாக குடிநீர் குழாய்களில் வரும் தண்ணீரும் செந்நிறமாகக் காட்சியளிக்கிறது. அதனால் பொதுமக்கள் அதைக் குடிநீராகப் பயன்படுத்த அச்சம் அடைந்திருக்கிறார்கள். பெரும்பாலான மக்கள் கேன் தண்ணீரை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.
Also Read: `சுலோச்சன முதலியார்…ஆண்டு 1840..!’ -மின் விளக்குகளால் ஒளிர்ந்த தாமிரபரணி பாலம்
இதனிடையே, தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பது குறித்து தூத்துக்குடியைச் சேர்ந்த `எம்பவர்’ சுற்றுச்சூழல் அமைப்பின் இயக்குநர் சங்கர், தமிழக மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். இது குறித்து 4 வாரத்தில் பதில் அளிக்குமாறு நெல்லை ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தாமிரபரணி தண்ணீர் நிறம் மாறியிருப்பது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்ட அறிக்கையில்,“ஆற்று நீர் நிற மாற்றம் தொடர்பாக அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டார்கள். அணையில் குறைவான தண்ணீரே இருக்கிறது.
குடிநீர் மற்றும் விவசாயத் தேவைக்குத் தண்ணீர் தேவைப்படுவதால் பாபநாசம் அணையின் அடிப்பகுதியில் உள்ள மதகில் இருந்து நீர் வெளியேற்றப்படுகிறது. அதனால் கீழ் பகுதியில் உள்ள சேறு, மணல், மக்கிப் போன மரங்களால் தண்ணீரின் நிறம் மாறியிருக்கிறது. அதனால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. தொடர்ந்து தண்ணீரை ஆய்வு செய்து வருகிறோம்” என்றார்.