சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நகர் பகுதிகளிலும் நாளை முதல் சலூன் கடைகள், அழகு நிலையங்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா தடுப்பு பணியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு தளர்வுகள் படிப்படியாக வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது சலூன் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு வழிமுறைகளுடன் பல்வேறு தளர்வுகளும் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே ஊரகப் பகுதிகளில் முடிதிருத்தும் நிலையங்கள் மே 19 முதல் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது முடிதிருத்தும் மற்றும் அழகு நிலைய தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் மே 24 முதல் தினமும் காலை 7 மணிமுதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் அனுமதி கிடையாது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களை பணியமர்த்தக்கூடாது. பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
பணியாளர்களுக்கோ, வாடிக்கையாளர்களுக்கோ சளி, காய்ச்சல், இருமல் இருந்தால் நிலையங்களுக்குள் அனுமதிக்கக்கூடாது. வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் வழங்குவதையும் முகக்கவசம் அணிவதையும் உறுதி செய்ய வேண்டும். குளிர்சாதன வசதி இருப்பின் அதை உபயோகப்படுத்தக்கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.