கேரளாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று ஒரே நாளில் 42 புதிய கொரோனா நோயாளிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த ஜனவரியில் கொரோனா தொற்று பரவியதிலிருந்து ஒரு நாளில் பதிவான மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். நான்காவது கட்டமாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவிற்குப் பிறகு வெளிநாடுகளிலிருந்தும் வேறு மாநிலங்களிலிருந்தும் அழைத்து வரும் பணியை மத்திய அரசு தொடங்கியிருக்கிறது.
இதனிடையே மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து பலர் கேரளாவிற்குத் திருப்பி வருகின்றனர். அவ்வாறு திரும்பிய பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ஆகவே கேரளாவில் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை ஒரே நாளில் இந்தளவுக்கு உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்த உயர்வு குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், “வரும் நாட்களில் அதிகமான மக்களை எதிர்பார்க்கிறோம். ஊர் திரும்பும் அம்மக்களை வேண்டாம் என்று சொல்ல முடியாது. இந்த நிலைமை மிகவும் முக்கியமானது.
ஆனால் அதற்காகப் பீதியடையத் தேவையில்லை. நமக்குத் தேவையானது அதிக விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புதான். இரண்டாம் நிலை தொற்றைத் தவிர்ப்பதற்கு நாங்கள் எல்லாவற்றையும் செய்வோம் ”என்று கூறியுள்ளார். கடந்த இரண்டு வாரங்களில் 90,000க்கும் மேற்பட்ட மக்கள் ரயில், சாலை மற்றும் விமானம் மூலம் மாநிலத்திற்குத் திரும்பியுள்ளனர்.
இன்றைக்குப் பதிவு செய்யப்பட்ட 42 புதிய நோயாளிகளில் 21 நோயாளிகள் மற்ற மாநிலங்களிலிருந்து திரும்பியவர்கள். அதில் 17 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர்கள் என்றும் முதல்வர் தெரிவித்தார். இதனிடையே வட கேரள மாவட்டங்களான கண்ணூர் மற்றும் மலப்புரத்தில் அதிகபட்சமாக தலா 36 நோயாளிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.