சீனாவில் உருவானதாகக் கருதப்படும் கொரோனா வைரஸ் இன்று உலகையே நிலை குலைய வைத்துள்ளது. இதுவரை உலகளவில் 50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்த வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். 3.25 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். ஆரம்பத்தில் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நாடுகள் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துகொண்டிருக்கும் நிலையில், மிகப்பெரிய நாடுகள் பலவும் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில் எனத் திணறி வரும் நாடுகளில் பட்டியலின் நீளம் அதிகம்.
பாதிப்படைந்த நாடுகளில் எண்ணிக்கையின் அடிப்படையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் இதுவரை 15 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்படைந்துள்ளனர். சுமார் 93,000 பேர் இறந்துள்ளனர். இந்த நிலையிலும், அதிபர் ட்ரம்ப் வைரஸைக் கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல் சீனாவின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுப்பி வருவதாக சர்வதேச அளவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்ட பல தலைவர்களும் அவர்மீது குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பிடமும் ட்ரம்ப் சண்டையிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “சீனாவில் அடையாளம் தெரியாத சில நபர்கள், லட்சக்கணக்கான நபர்களைக் கொன்ற கொரோனா வைரஸ் தொடர்பான பிரச்னையில் சீனாவைத் தவிர மற்ற அனைவரையும் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளனர். `சீனாவின் திறமையின்மை இது’ என்பதை தயவுசெய்து அவர்களுக்கு விளக்குங்கள். அதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. இது உலகளவில் அதிக நபர்களைக் கொன்றுள்ளது” எனக் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொடர்பான நெருக்கடியை அமெரிக்கா தவறாகக் கையாண்டதை மறைக்க சீனா மீது குற்றம் சுமத்துவதாக சீனா கூறியதை அடுத்து ட்ரம்ப் இந்தக் கருத்தைக் கூறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், “அமெரிக்கா, சீனாவை பழி வாங்க முயற்சி செய்கிறது. சொந்தப் பொறுப்பை ஏற்க அமெரிக்கா தயாராக இல்லாததால் சீனாவைப் பயன்படுத்துகிறது” என்று கூறியுள்ளார்.
Also Read: `30 நாள்களுக்குள் நிரூபிக்கத் தவறினால் முழு நிதியும் கட்’ – WHO-வுக்கு ட்ரம்ப் மீண்டும் மிரட்டல்