கொரோனா வைரஸ் காரணமாக 4-வது முறையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. 2-வது பிளாட்பாரத்திலிருந்து சிறப்பு ரயில்கள் புறப்படத் தயாராக இருந்தன.
Also Read: `அருள்வாக்கு சொல்வார்.. அவர் எனக்கு சாமி மாதிரி!’ – முறைதவறிய நட்பால் கொலைவழக்கில் சிக்கிய மருமகன்
சிறப்பு பணியாகத் திருவள்ளூர் ராஜாஜிபுரம், விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த டிக்கெட் பரிசோதகர் பரந்தாமன் (45) ஈடுபட்டுக்கொண்டிருந்தார். முதல் ரயில் நேற்று மாலை 4 மணிக்கு ஒடிசாவுக்குப் புறப்பட்டுச் சென்றது. டிக்கெட்களை பரிசோதித்தார் பரந்தாமன். அதன் பின்னர், அந்த ரயில் புறப்பட்டுச் சென்றது. அடுத்த சிறப்பு ரயில் பீகாருக்குச் செல்ல புறப்பட தயாராகக் காத்திருந்தது. அந்த ரயிலிலும் டிக்கெட்களை பரிசோதனை செய்ய பரந்தாமன் காத்திருந்தார்.
ரயில் புறப்பட நேரமிருந்ததால் தண்டவாளத்தை அவர் கடந்தார். அப்போது சென்னை எண்ணூரிலிருந்து சேலம் மேட்டூருக்கு நிலக்கரி ஏற்றிக் கொண்டு சரக்கு ரயில் வேகமாகத் திருவள்ளூர் ரயில் நிலையத்தைக் கடந்தது. அந்த ரயில் வருவதை டிக்கெட் பரிசோதகர் பரந்தாமன் கவனிக்கவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் சரக்கு ரயில் பரந்தாமன் மீது மோதியது. இதில் அவரின் உடல் சிதறி சம்ப இடத்திலேயே உயிரிழந்தார்.
Also Read: `முறை தவறிய நட்பு; மருமகனைத் தட்டிக் கேட்ட அத்தை!’ -கொலையில் முடிந்த சென்னைக் கொடூரம்
டிக்கெட் பரிசோதகர் பரந்தாமன் ரயில் மோதி இறந்தத் தகவல் திருவள்ளூர் ரயில்வே போலீஸாருக்குக் கிடைத்தது. உடனடியாக போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பரந்தாமனின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்த ரயில்வே போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். பலியான பரந்தாமனுக்குத் திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர்.
ரயில்வே போலீஸார் கூறுகையில், “ஒடிசாவுக்குச் சென்ற சிறப்பு ரயில் பணி முடிந்ததும் அடுத்து புறப்பட உள்ள பீகார் ரயில் பணிக்காக டி.டி.ஆர் பரந்தாமன் தயாராகிக்கொண்டிருந்தார். அப்போதுதான் அவர் தண்டவாளத்தைக் கடந்துள்ளார். ஊரடங்கு காரணமாக சொற்ப ரயில்கள் மட்டுமே இயக்கப்படுவதால் சரக்கு ரயில் அந்த நேரத்தில் வருவதை பரந்தாமன் கவனிக்கவில்லை. திருவள்ளூர் ரயில் நிலையம் என்பதால் சரக்கு ரயிலின் குறிப்பிட்ட வேகத்தில்தான் வந்துள்ளது.
Also Read: `ரயில் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!’ – தண்டவாளத்தைக் கடந்தபோது நேர்ந்த விபரீதம்
ஒரு நிமிடம் முன்னதாகச் சென்றிருந்தால் பரந்தாமன் உயிர்பிழைத்திருப்பார். ரயிலில் சிக்கிய பரந்தாமனின் கால் துண்டானது. அடுத்து அவரின் கைகளிலும் காயம் ஏற்பட்டது. ரயில் மோதியதில் அவரின் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு பரந்தாமனின் சடலம் தகனம் செய்யப்பட்டது” என்றனர்.
சிறப்பு ரயில் பணிக்காக வந்த டிக்கெட் பரிசோதகர், ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.