அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா முற்றிலும் திறமையற்றவர் என அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
உலகில் இதுவரை 48,04,849 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 3.16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார். அதேசமயம் 18.6 லட்சம் பேர் சிகிச்சை பலன்பெற்று வீடு திரும்பியுள்ளனர். உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 15,27,664 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் 90,978 பேர் இதுவரை அங்கு உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்க அதிபரின் நிர்வாகத் திறமை மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அண்மையில் கல்லூரி பட்டதாரிகளுடன் காணொலி மூலம் உரையாடிய அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, கொரோனா வைரஸ் அமெரிக்கா தலைமையின் நிர்வாகத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டதாக தெரிவித்திருந்தார். அத்துடன் இங்கு கொரோனா தொற்றை தவிர எதுவும் இல்லை என்றும், அதிகாரிகள் எல்லாரும் என்ன செய்கிறார்கள் என்பதை கொரோனா வந்து காட்டிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “ஒபாமா ஒரு திறமையற்ற அதிபராக இருந்தார். முற்றிலும் திறமையற்றவர், அவ்வளவு தான் சொல்வதற்கு வேறில்லை” என்றார்.