உன் தோல்வியடைந்த நாட்டுக்கு உருப்படியாய் ஏதாவது செய் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிதியை இந்திய அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களான ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் உள்ளிட்ட பலரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிதியின் அறக்கட்டளைக்கு நிதியுதவி செய்தனர். இந்நிலையில் பாகிஸ்தானில் பொது இடத்தில் அப்ரிடி காஷ்மீர் தொடர்பாகவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த வீடியோ வெளியாகி வைரலானது. இதனையடுத்து இந்திய வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

image

இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த ஹர்பஜன் சிங் “இந்தியா குறித்தும், நம் பிரதமர் குறித்தும் ஷாகித் அப்ரிடி பேசியது வருத்தம் அளிக்கிறது. அதோடு அதை சுத்தமாக ஏற்றுக்கொள்ள முடியாது. அப்ரிதி தனது அறக்கட்டளைக்காக உதவும் படி கேட்டுக்கொண்டார். மனிதாபிமன அடிப்படையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் தவிப்பவர்களுக்காக தான் நாங்கள் உதவினோம். நம் பிரதமர் கூட எல்லைகள், மதங்கள், சாதியை கடந்து கொரோனா வைரஸை எதிர்த்து போராட வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்காக தான் நாங்கள் அவருக்கு உதவினோம். ஆனால் அந்த மனிதர் தற்போது நாட்டுக்கு எதிராக பேசியுள்ளார். இனி அவருடன் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை. நம் நாட்டைப்பற்றி அவதூராக பேச அவருக்கு எந்த அருகதையும் இல்லை” என காட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் காம்பீர் தனது ட்விட்டர் பதிவில் “பாகிஸ்தானில் 7 லட்சம் படையினர் 20 கோடி மக்கள் துணையுடன் உள்ளதாக 16 வயது அப்ரிதி கூறுகிறார். அப்படியிருந்தும், காஷ்மீருக்காக சுமார் 70 ஆண்டுகள் பிச்சை எடுத்துக்கொண்டுள்ளது. அப்ரிதி, இம்ரான், பாஜ்வா போன்ற ஜோக்கர்கள் பாகிஸ்தான் மக்களை முட்டளாக்க, இந்தியாவுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் மீண்டும் மீண்டும் விஷத்தை பரப்பலாம். ஆனால் தீர்ப்பு நாள் வரை காஷ்மீரை பெறப்போவதில்லை. வங்கதேசம் குறித்து நினைவிருக்கிறதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து சிஸ்கே அணியின் சின்ன தல சுரேஷ் ரெய்னா தன்னுடைய ட்விட்டர் பதிவில் “என்ன மாதிரியான ஆட்கள் இவர்கள் என தெரியவில்லை. நீங்கள் முதலில் உங்கள்ல தோல்வியடைந்த நாட்டுக்கு உருப்படியாக ஏதாவது செய்யுங்கள், காஷ்மீர் விட்டுவிடுங்கள். நான் ஒரு பெருமை மிகு காஷ்மீரி, அது எப்போதும் இந்தியாவின் தவிர்க்க முடியாத பகுதிதான். ஜெய் ஹிந்த்” என பதிவிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.