ஒன்றரை மாதங்களாக நீடித்துவரும் ஊரடங்கில் சிறிதுசிறிதாகத் தளர்வைக் கொண்டுவரத் தொடங்கியிருக்கிறார்கள். பொதுத்துறை மற்றும் தனியார் அலுவலகங்கள் குறைந்த அளவிலான ஊழியர்களுடன் இயங்கத்தொடங்கியுள்ளன. தொழிற்சாலைகள், கடைகளும்கூட சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் இயக்கப்படாவிட்டாலும் மக்கள் இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். சரக்கு வாகனப் போக்குவரத்தும் அதிகரித்துவருகிறது.
இந்தியாவில், நாளொன்றுக்கு 5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் சுத்திக்கரிக்கப்பட்டு வந்தது. ஊரடங்கு காரணமாக பெட்ரோல், டீசல் பயன்பாடு குறைந்ததால் உற்பத்தியான பெட்ரோல், டீசலைச் சேமிப்புக்கிடங்குகளில் வைத்தனர். சேமிப்புக்கிடங்குகளில் இடப்பாற்றாக்குறை ஏற்படும் சூழல் வந்ததால் ஐ.ஓ.சி நிறுவனம், ஏப்ரல் முதல் வாரத்தில் தனது உற்பத்தியை 45 சதவிகிதமாகக் குறைத்துக்கொண்டது. தற்போது பெட்ரோல், டீசல் தேவைப்பாடு அதிகரித்திருப்பதால், எண்ணெய் சுத்திக்கரிப்பு நிறுவனங்களும் தங்களது உற்பத்தியை அதிகப்படுத்தத் தொடங்கியுள்ளன.
ஐ.ஓ.சி நிறுவனம், தனது ஆலைகளில் கச்சா எண்ணெய் சுத்திக்கரிப்பை, 45 சதவிகிதத்திலிருந்து 60 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. இம்மாத இறுதிக்குள் தனது உற்பத்தியை 80 சதவிகிதமாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. பி.பி.சி.எல் நிறுவனம், கடந்த ஏப்ரல் மாதத்தில் தனது உற்பத்தியை 50 சதவிகிதமாகக் குறைத்திருந்தது. தற்போது 70 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. ஊரடங்கு முழுமையாக நீக்கப்படும்போது அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் முழுவீச்சில் இயங்கத்தொடங்கும்.
சர்வதேச அளவிலும் பெட்ரோல், டீசலுக்கான தேவைப்பாடு அதிகரிக்கும்போது, கச்சா எண்ணெய் விலை உயரக்கூடும். தற்போது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி, வாட் வரி போன்றவற்றை மத்திய, மாநில அரசுகள் உயர்த்தியுள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.