டாஸ்மாக் திறப்பு விவகாரத்தில் ரஜினி தெரிவித்த கருத்தை தான் ஆதரிக்கவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கத்திற்கு இடையே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. பின்னர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
இதற்கிடையே கருத்து கூறிய ரஜினிகாந்த், “இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவைநிரப்பநல்லவழிகளைபாருங்கள்” என ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
இந்த கருத்தை மு.க.அழகிரி ஆதரித்தது போல, அவர் பெயர் கொண்ட போலியான ட்விட்டர் பக்கத்திலிருந்து “உண்மையை உரக்க சொன்னீங்க நண்பா” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக தற்போது மு.க.அழகிரி தரப்பிலிருந்து அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், “நண்பர் ரஜினிகாந்த் கருத்தை நான் ஆதரிப்பது போன்று என் படத்தோடு சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வருகின்றனர். அதுகுறித்து நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. சமூக வலைதளங்களில் எந்தக் கணக்கும் இல்லை. அதை நான் பயன்படுத்தவும் இல்லை” என கூறப்பட்டுள்ளது.