கொரோனா தடுப்பு பணிகளுக்காகப் பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்ட தொகை முறையாகத் தணிக்கை செய்யப்பட்டு மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக மார்ச் 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு மே 17 ஆம் தேதி வரை அமலில் இருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டுமென்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதனையடுத்து விளையாட்டு வீரர்கள், தனியார் நிறுவனங்கள், திரைத்துறையினர், பொதுமக்கள் எனப் பலரும் நிதியளித்து வருகின்றனர்.
The #PmCares fund has received huge contributions from PSUs & major public utilities like the Railways.
It’s important that PM ensures the fund is audited & that the record of money received and spent is available to the public.
— Rahul Gandhi (@RahulGandhi) May 9, 2020
இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பதிவில் ” பிரதமர் நிவாரண நிதிக்கு ஏராளமான தொகை வந்து குவிந்துள்ளது. அதற்குத் தனியார் நிறுவனங்களும், பொதுத் துறை நிறுவனங்களான ரயில்வே துறை ஆகியவை நிதியை வழங்கியுள்ளன. இந்தத் தொகை அனைத்தும் தணிக்கை செய்யப்பட்டு, பொது மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் வைக்க வேண்டும். இதனைப் பிரதமர் செயல்படுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.